சென்னை கடற்கரையில் குடியரசு தினவிழா - ரோசய்யா கொடியேற்றினார்.. ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
சென்னை : நாட்டின் 66-ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப் படுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காந்தி சிலை அருகே கவர்னர் கே.ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 66வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக காந்தி சிலை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழச்சியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
முன்னும், பின்னும் போக்குவரத்து மோட்டார் சைக்கிள்களில் அணிவகுப்பு நடைபெற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காரில் வந்திறங்கினார். காரில் இருந்தபடியே காமராஜர் சாலையில் இருபுறமும் கூடியிருக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு வந்த அவரை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அவரை தொடர்ந்து, கவர்னர் கே.ரோசய்யா காலை 7.58 மணிக்கு விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்துவர காரில் வந்திறங்கினார். அவரும் பார்வையாளர்களுக்கு குடியரசு தினவாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழா மேடைக்கு வந்த கவர்னர் ரோசய்யாவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, முப்படை தளபதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளை கவர்னர் ரோசய்யாவுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஹெலிகாப்டர் பூ தூவும்
சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு இருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைக்க, அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவியது.
அதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய அரசின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார், செயற்கைகோள் போன்றவைகளின் மாதிரிகளுடன், விமானப்படை வாகனமும், நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனமும், ராணுவ கனரக தொழிற்சாலை வாகனமும், போர்க்கப்பலுடன் கடற்படை வாகனமும் அணிவகுத்தன.
அதன் தொடர்ச்சியாக மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.
பதக்கங்கள்
அதனைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
பின்னர், பதக்கம் பெற்ற அனைவரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர், நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் வண்ண வண்ண உடையணிந்து நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்தினர்.
அலங்கார ஊர்திகள்
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளும் காலை 9.30 மணிக்கு நிறைவு பெறும்.
குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக காந்தி சிலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் பி.தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், மேயர், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்கலைக்கழக துணை-வேந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஒபாமா வருகை:
நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையொட்டி தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அனைவரும் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் 66-ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, தமிழகத்திலும் குடியரசு தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி மெரினா பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இணை கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
சென்னை மாநகர் முழுவதும் குடியரசு தின பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
தேநீர் விருந்து:
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, கவர்னர் மாளிகையில் காலை 11 மணியளவில் முக்கியப் பிரமுகர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.