எப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிடக் கோரும் வழக்கு... டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிட கோரிய வழக்கில் 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரை சேர்ந்த காசிராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
காசிராஜன் தாக்கல் செய்த மனுவில், கைது செய்யப்படும் நபர்களுக்கு கூட எப்.ஐ.ஆர். நகல் கொடுப்பது இல்லை என்றும், பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எப்.ஐ.ஆர். நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி முறையாக கடைப்பிடிப்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், எனவே, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் காவல்துறைக்கான இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 2 மாதத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.