மூலப்பொருட்கள் விலை கிடுகிடு.... தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
மூலப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆக்ரா உள்ளிட்ட வெளிமாநிலத்திற்கும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தீப்பெட்டி அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலைகளை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சமீப காலமாக தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான குச்சி, மெழுகு, பேப்பர், அட்டை போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
மத்திய, மாநில அரசுகளும் தீப்பெட்டி தொழிலுக்கு போதிய சலுகை வழங்கவில்லை. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் தமிழக தீப்பெட்டிகளின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டல் வட மாநிலங்களில் ரூ.260 முதல் ரூ.280 வரை விலை போனது. ஆனால் கடந்த சில வாரங்களாக இதன் விலை ரூ.240 ஆக குறைந்து விட்டது. இந்த நெருக்கடியால் தீப்பெட்டி தொழிலை தொடர முடியாமல் உற்பத்தியாளர்கள் திண்டாடி வருகின்றனர். இதை கண்டித்து அடையாள போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications