'அஞ்சா நெஞ்சன்' என்று பெயர் வைத்த கருணாநிதியே அழகிரியை நீக்கிய வினோதம்!
சென்னை: அஞ்சா நெஞ்சன்.. மு.க.அழகிரியின் செல்லப் பெயர்களிலேயே மிக முக்கியமான பெயர் இதுதான். அழகிரி என்று சொல்லியவர்களை விட அஞ்சா நெஞ்சன் என்று அவரைக் கூப்பிட்டவர்கள்தான் அதிகம். அப்படிப் பெரும் புகழ் பெற்ற இந்தப் பட்டப் பெயரை அவருக்கு வைத்ததே கருணாநிதிதான். இன்று அந்தக் கருணாநிதியே பெரும் விரக்திக்குள்ளாகி, வேதனைக்குள்ளாகி, கட்சியை விட்டு அழகிரியை நீக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
முரசொலியைப் பார்ப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர்தான் அழகிரி. அதேசமயம், ஸ்டாலினுக்குப் போட்டியாக வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அவர் மதுரைக்கே அனுப்பப்பட்டார் என்ற பேச்சுக்களும் அ்போது எழுந்ததுண்டு.
ஆனாலும் மதுரையில் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வந்தார் அழகிரி. மதுரையில் இருந்தபடியே சென்னையை கிடுகிடுக்க வைத்தவர் அழகிரி என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் அவரது செயல்பாடுகள் அப்படி இருந்தன.
கருணாநிதியின் 2வது மகன்
கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியின் முதல் மகன்தான் மு.க.அழகிரி. கருணாநிதியின் புத்திரர்கள் வரிசையில், மு.க.முத்துவுக்கு அடுத்துப் பிறந்தவர் அழகிரி. மதுரையில் வசித்து வரும் அழகிரிக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சென்னையில் படிப்பு - மதுரையில் வாசம்
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பிஏ முடித்தவர் அழகிரி. மதுரைக்கு 1989ம் ஆண்டு இடம் பெயர்ந்து வந்தார்.
பொறுப்பே இல்லாமல் பல காலம்
மதுரைக்கு வந்தது முதல் அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை. ஆனால் அழகிரி திமுக என்று சொல்லும் அளவுக்கு மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அழகிரி ஆதரவு வட்டம் படுவேகமாக உருவாகி விட்டது கடந்த காலங்களில்.
மூத்த தலைவர்களின் சிம்ம சொப்பனம்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக மதுரையைச் சேர்ந்த பல முக்கிய திமுக தலைவர்களுக்கு அழகிரியின் தலையீடுகள் பெரும் சங்கடத்தை கொடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக பி.டி.ஆ்ர். பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இதுகுறித்து கருணாநிதியிடம் நேரடியாகவே புலம்பும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தியதே இல்லை அழகிரி.
2008ல்தான் முதல் முறையாக கட்சிப் பதவி
பல காலமாக கட்சிப் பொறுப்பே இல்லாமல் கட்சியைக் கலக்கி வந்தவரான அழகிரி, 2008ம் ஆண்டுதான் முதல் முறையாக கட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
திருமங்கலம் கொடுத்த பரிசு
திருமங்கலம் இடைத் தேர்தலில் அவர் செயல்பட்ட விதம், அவர் வகுத்த உத்திகள், பிரசார முறை, இன்ன பிற செயல்பாடுகளால் கட்சி பெற்ற வெற்றியால் கவரப்பட்ட கட்சி்த் தலைமையே, அவருக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது.
2009ல் முதல் முறையாக தேர்தலில் போட்டி
இதையடுத்து படு வேகமாக கட்சிக்குள் ஊடுறுவ ஆரம்பித்த அழகிரி அலை அவரை 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலி்ல மதுரை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக நிறுத்தி வைத்தது. இதிலும் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அழகிரி. தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அழகிரி.
பேசாமல் சாதித்த அழகிரி
மத்திய அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஒருமுறை கூட பேசியதில்லை,விவாதத்தில் கலந்து கொண்டதில்லை, உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னதில்லை என்ற வித்தியாசமான பெருமையையும் பெற்றவர் அழகிரி.
அழகிரியின் கோட்டையாக மாறிய மதுரை
திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அழகிரியின் கோட்டையாக மாறிப் போயிருந்தது மதுரை ஒரு காலத்தில். அங்கு அவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை. மதுரையின் ஒவ்வொரு அடி நிலத்திலும் அழகிரியின் ஆதிக்கமும், அவரது அதிகாரமும் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது என்று சொல்லலாம். அப்படி ஒரு வியாபித்த ஆளுமையுடன் திகழ்ந்தவர் அழகிரி.
சர்ச்சைகளின் நாயகன்
அழகிரி மதுரையில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களைச் சந்தித்தது அந்த நகரம். தா.கி. படுகொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுதலையானார் அழகிரி. அதேபோல தினகரன் மதுரை அலுவலகம் தாக்கி சூறையாடப்பட்டு 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் அழகிரி ஆதரவாளர்கள் சிக்கினர். திமுகவுக்குள் வாரிசுச் சண்டையை விஸ்வரூபம் எடுக்க வைத்தது இந்த சம்பவம்தான். தொடர்ந்து நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளும் பின் தொடர்ந்து வந்தன.
சிதறிப் போன ஆதரவாளர்கள்
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அழகிரியின் ஆதரவு வட்டம் சிதறிப் போக ஆரம்பித்தது. அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி என பலரும் பிரிந்து போயினர். இவர்களில் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார். தளபதி ஸ்டாலின் பக்கம் போய் விட்டார். மன்னன், முபாரக் மந்திரி உள்பட சிலரே அழகிரியுடன் இருந்தனர்.
கலவரக்காரர் போல மாறிய பரிதாபம்
தென் மாவட்டங்களின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவரான அழகிரி, கிட்டத்தட்ட ஒரு கலவரக்காரர் போல திமுகவினரால் பார்க்கப்படும் அளவுக்கு நிலைமை போய் இன்று கட்சியை விட்டு நீக்கப்படும் அளவுக்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது அவருக்கே கூட பெரும் அதிர்ச்சியான செய்திதான். அழகிரியின் அடுத்த மூவ்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.