ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ.வை எதிர்க்க தேமுதிக முடிவு?- விஜயகாந்த் ஆலோசனை
சென்னை: அனைத்து சாலைகளும் ஆர்.கே.நகரை நோக்கி என்பது போல ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, குற்றமற்றவர் என்று நிரூபித்து மீண்டும் முதல்வராகி போட்டியிடுவதுதான்.
இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. பாஜக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களில் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.
ஸ்ரீரங்கத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி, தன்னை பொது வேட்பாளராக ஆதரிக்க கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அதற்கான முடிவு என்னவென்று இன்னும் யாரும் அறிவிக்கவில்லை
இந்த நிலையில் ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜெயலலிதா போட்டி
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளார்.

எதிர்கட்சிகளின் நிலை
தேர்தலை புறக்கணிப்பதாக திமுக, விசிக, பாமக, மதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன. பாஜக, காங் கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டொரு நாளில் முடிவினை அறிவிப்பதாக கூறியுள்ளன.

விஜயகாந்த் ஆலோசனை
இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லை புறக்கணிப்பதா? என்பதை முடிவு செய்வதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கருத்துகேட்ட விஜயகாந்த்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டறிந்தார்.

ரகசிய ஆலோசனை
ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவலை மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான் விஜயகாந்த் தெரிவித்தாராம். இந்தக் கூட்டத்தை அவர் மிகவும் ரகசியமாக நடத்தி முடித்துள்ளார்.

உயர்மட்டகுழு ஆலோசனை
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நேற்று மாலை தேமுதிக உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடனும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா? என்பது பற்றி இன்று அல்லது நாளைக்குள் விஜயகாந்த் தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

எதிரிகளே இல்லையே
எதிர்கட்சிகள் முற்றிலும் தேர்தலை புறக்கணித்தால் ஜெயலலிதா சொன்னதுபோல களத்தில் எதிரிகளே இல்லை என்பது உண்மையாகிவிடும் எனவே ஜெயலலிதாவை எதிர்த்து யாராவது களமிறங்குவார்களா? அல்லது பொது வேட்பாளராக டிராபிக் ராமசாமியை ஆதரிப்பார்களா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications