கோலிவுட்காரர்களே.. ஒரு பரபரப்பான "ஸ்கிரிப்ட்" வேணுமா.. இதைப் படிங்க பாஸ்!
ஆர்.கே. நகரில் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டிடுவதற்காக விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்பாக பல்வேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.
நடிகர் விஷால் மனுவை ஆர்.கே.நகரில் வசிக்கும் 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில், 3 பேர் நாங்கள் முன்மொழியவில்லை. போலி கையெழுத்து போட்டுள்ளனர் என்று தேர்தல் அதிகாரி முன்பு தெரிவித்தனர். இதனால் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்மொழிந்த சுமதி என்ற பெண்ணின் கணவர் வேலுவிடம் விஷால் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
ஆடியோவில் இருந்தவை தற்போது வெளியாகியுள்ளது.
விஷால்: வேலு..... நான் விஷால் பேசுறேன்.
வேலு: சொல்லுங்க சார்...
விஷால் : கையெழுத்து உன்னது இல்லன்னு லெட்டர் கொடுத்திருக்கியாமே...
வேலு : எங்க வூட்டு லேடீஸ்கிட்ட மிரட்டி வாங்கியிருக்காங்க சார்.
விஷால்: யாரு மிரட்டி வாங்கியிருக்கிறது?
வேலு: மூணு மணிக்கு வந்து ஒய்ப்பை கூட்டிப் போயிருக்காங்க சார்...
விஷால்: யாரு வந்து கூட்டிட்டு போனது?
வேலு : மதுசூதனன் டீம் சார்
விஷால்: மதுசூதனன் டீமா? எதுக்குக் கூப்பிட்டாங்களாம்மா?
வேலு: லேடீஸைக் கூட்டிட்டுப்போகும்போது நான் இல்லே சார். என்னை ஒரு ரூம்ல உக்கார வெச்சிட்டாங்க சார்.
விஷால்: எந்த ரூம்ல... எங்க உட்கார வச்சாங்க சொல்லு வேலு...
வேலு: மதுசூதனன் ஆபீஸ். அகஸ்தியா தியேட்டர் பேக் சைட்ல இருக்குற அப்பார்ட்மென்ட்ல இருக்க சொல்லிட்டாங்க. அவங்க வரவரைக்கும் இங்கேயே இருன்னு சொன்னாங்க சார். நான் சொல்றது மாதிரி சொல்லுன்னு சொல்லு எழுதி கையெழுத்து வாங்கிட்டு வீடியோ ரெக்கார்டிங் எடுத்திருக்காங்க சார்.
விஷால்: யாரு வீடியோ எடுத்தாங்க?
வேலு: எனக்கு பணம் கொடுத்தவங்க சாப்... கையில ஒரு கட்டு பணம் கொடுத்தாங்க.
விஷால்: எவ்ளோ கொடுத்தாங்க? எவ்ளோப்பா கொடுத்தாங்க பணம்?,
வேலு: அது தெரியல சார். ரெண்டாயிரம் கட்ட பிரிச்சு பாதி கொடுத்தாங்க சார்.
விஷால்: அப்போ நீ பணத்துக்கு விலை போயிட்டீயா?
வேலு: இல்ல சார்...எனக்குக் காசு வேணாம். நான் ஒழைச்சுச் சாப்பிடுறேன்னு சொன்னேன். நான் முடியாதுனு சொன்னதும் லேடிஸை தனியா கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.
விஷால்: எங்க கூட்டிட்டுப் போனாங்க?
வேலு: தேர்தல் மனு தாக்கல் பண்ணிங்களே சார்... அந்த பில்டிங் மேல ஜோனல் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கப் போயிட்டு, இவங்க கையெழுத்து போட்டது போலினு சொல்லி வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார்.
விஷால்: அவங்க எங்க இருக்காங்க இப்போ?
வேலு: டிவியில எல்லாம் போட்ற போறாங்கண்ணு அவங்க வீட்ல ரொம்ப மனசு கஷ்டத்துல அழுதுனு இருக்காங்க சார்.
விஷால்: இந்த கையெழுத்து என்னோடது இல்லன்னு வந்து என்கிட்ட சொல்ல சொல்லு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல சொல்லச்சொல்லு...
வேலு: சரி சார், நான் இட்டுனு வரேன் சார் என்று அந்த பேச்சு முடிகிறது. இந்த ஆடியோவை தேர்தல் ஆணையத்தில் அளித்தார் விஷால்.
இரண்டாவது முறையாக பரிசீலனை
இந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. சில திருத்தங்களுக்குப் பிறகு விஷால் அளித்த ஆதாரங்களை ஏற்று மீண்டும் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக வெளியே வந்த விஷால் தெரிவித்துவிட்டு, 'நீதி நியாயம் ஜெயித்தது. அனைவருக்கும் நன்றி' என்று அறிவித்துவிட்டுச் சென்றார்.
வேட்புமனு நிராகரிப்பு
விஷால் தரப்பினர் நிம்மதியாக சாப்பிட சென்றனர். விஷாலுக்கு சில மணிநேரம் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆனால் 11 மணிக்கு விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டது. என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லையே என்று ஆதங்கத்துடன் கேட்டார் விஷால்.