ஆர்கே நகரில் முதல்வர் எடப்பாடி பணம் கொடுத்த புகார் பற்றி என்ன நடவடிக்கை? அரசை வெளுத்த ஹைகோர்ட்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான புகாரில் என்ன நடவடிக்கை சென்னை ஹைகோர்ட் விளாசியுள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை ஹைகோர்ட் விளாசியுள்ளது. வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிட்டோர் மீது ஏன் வழக்கு போடவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வைரக்கண்ணு என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
ஆர்கே நகர் தொகுதியில் பணம் கொடுத்த வழக்கில் முன்னேற்றம் என்ன? என்றும் நீதிபதிகள் விளாசினர். வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிட்டோர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை கண்காணித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர் வைக்கண்ணுவின் வழக்கறிஞர், ஆர்கே நகர் பணப்பட்டுவாடா வழக்கை விசாரிக்க இணை ஆணையர் மனோகரன் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.