சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ! உதயநிதியை போல் செங்கல்லை காட்டி வைரலானவர்! யார் இந்த கீர்த்தனா?
சென்னை: தவெக அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சரும் சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவுமான கீர்த்தனா, தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதியை போல் செங்கல்லை காட்டி வைரலானவர். யார் இவர் என்பதை பார்க்கலாம்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார் கீர்த்தனா. இந்த தொகுதி 1957 இல் உருவாக்கப்பட்டது. இது அதிமுகவின் கோட்டை என அறியப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சரானார். இவர் 2016ஆம் ஆண்டும் வென்று அமைச்சரவையில் இடம்பெற்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வென்றார். ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த தொகுதியில் பாஜகவில் இருந்த நடிகை கவுதமி, போட்டியிடுவதற்காக நிறைய பணிகளை செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுகவில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறினார். ராஜபாளையத்தில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். இதில் தவெக வேட்பாளர் கீர்த்தனா போட்டியிட்டார். அது போல் காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த அசோகனும் போட்டியிட்டிருந்தார்.
ஆனால் அசோகனையும், ராஜேந்திர பாலாஜியையும் 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் கீர்த்தனா 68709 வாக்குகளையும் பெற்றார். 57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

தவெக சார்பில் வென்ற கீர்த்தனா அந்த தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏ ஆவார். அது போல் தவெகவின் முதல் பெண் அமைச்சர். நேற்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற போது கடைசியாக பதவியேற்றவர். இவர் யார் என்பதை பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம், சத்திரரெட்டியாப்பட்டியை சேர்ந்த சம்பத்தின் மகள் கீர்த்தனா. 29 வயதான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் (Statistics) படித்திருந்தார். திருமணம் ஆகவில்லை.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய பன்மொழிகளில் புலமை கொண்டவர். இவர் நேரடியாக அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் ஆலோசகராக பணியாற்றியிருந்தார். பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் இணைந்து திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தார்.

ஆந்திராவில் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசனை குழுவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தவெகவில் மார்ச் மாதம் இணைந்த நிலையில் இவர் அடுத்த நாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் மதுரை எய்ம்ஸ் எங்கே என கேட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை தூக்கி காட்டி பிரச்சாரம் செய்தது பெரும் பேசுபொருளானது. அதே போல் 2026 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் விருதுநகருக்கு பல் மருத்துவக் கல்லூரி எங்கே என கேட்டு செங்கல்லை தூக்கி காட்டி வைரல் ஆனார். திமுக ஃபார்முலாவை கையிலெடுத்து இவர் பிரச்சாரத்தை விஜய் கூட முன்னணி நிர்வாகிகளிடம் சொல்லி பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல்லை தூக்கி காட்டிய கீர்த்தனா, விருதுநகருக்கு பல் மருத்துவக் கல்லூரியை கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications