சாலைகளை விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பயன்படுத்தக் கூடாது: சொன்னது அதிமுக எம்பி !
கரூர்: சாலைகளை விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது சாலைகளின் இருமருங்கிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பொதுமக்களிடம் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது. மேலும் விதி முறைகளை மீறி அதிமுகவினர் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திமுக தலைவர் கருணாநிதியும் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை பேசுகையில், சாலைகளில் எந்த ஊருக்கு எப்படி போவது என்ற போர்டுகளே தெரியவில்லை.
விளம்பர போர்டுகள்தான் கண்ணுக்கு தெரிகின்றன. வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு என்ன விளம்பரம் என்றுதான் பார்க்க தோணுகிறதே தவிர, சாலையில் வாகனத்தை ஒழுங்காக ஓட்ட வேண்டும் என்ற கவனம் சிதறுகிறது. சாலை என்பது பாதுகாப்பான போக்குவரத்துக்காக இருக்க வேண்டும். சாலைகளை விளம்பர பேனர்களை வைப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.