பேரறிவாளனுக்கு பரோல்... முதல்வருக்கு ராபர்ட் பயாஸ் உருக்கமான கடிதம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடனே பரோல் வழங்க வேண்டும் என்று மற்றொரு குற்றவாளியான ராபர்ட் பயாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் அவர்களை விடுதலை செய்ய கோரி பல முறை கோரியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். எனினும் அவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி நீர்த்துபோனது.
தற்போது பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். எனினும் அதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக சட்டசபையில் தனி நபர் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில் பேரறிவாளனுக்கு உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என்று மற்றொரு ராஜீவ் கொலை வழக்கு கைதியான ராபர்ட் பயாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தன்னை கருணை கொலை செய்து தன் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று முதல்வருக்கு ராபர்ட் பயாஸ் ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications