"புல்லட் ரவுடிகள்" பெருக்கெடுக்க காரணங்கள் என்னென்ன?
தமிழகத்தில் போலீசார் மீது ரவுடிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது.
சென்னை: வர வர ரவுடிகளுக்கு போலீஸ் மேல இருக்கும் பயம் குறைந்துவிட்டது.
கடந்த சில காலங்களாகவே போலீசார் ரவுடிகளால் ஆங்காங்கே தாக்கப்பட்டு வருகிறார்கள். போலீசாருக்கே மிரட்டலும், சவாலும் விடுக்கிறார்கள். சில சமயங்களில் ரவுடிகள் போலீசாரை தாக்கி விட்டு தப்பியும் விடுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? தமிழகத்தில் இவ்வளவு ரவுடிகள் பெருக என்ன காரணம்?
முதல் காரணம், நாம் என்ன தகிடுதத்தம் வேலை பண்ணாலும், இந்த போலீசார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் ரவுடிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டுவது காரணம், போலீஸ் நம்மை பிடித்தால் என்ன, கட்டிங் கொடுத்தால், விட்டுவிட போகிறார்கள் என்ற எண்ணம். மூன்றாவது காரணம், அப்படியே போலீஸ் பிடித்துவிட்டாலும் அசால்ட்டாக ஜாமீனில் வெளியே வந்துவிடலாம்.
பொதுத்தண்டனையே
நான்காவது காரணம், ஒருவரை மற்றொருவர் விரோதம் காரணமாக கொலை செய்யலாம் என்று நினைத்தாலும் அதற்காக ஒரு கும்பலையே திரட்டி விடுகிறார். தனிப்பட்ட முறையில் கொலை செய்து கொலையாளி என்ற பெயரில் மாட்டிக்கொண்டு தண்டனையில் சிக்குவதைவிட, கும்பலாக போய் கொலைசெய்தால், பொது தண்டனை என்று ஆகிறது.
செல்வாக்கு பின்னணி
ஐந்தாவது காரணம், சட்டுபுட்டுனு ஒரு கொலை கேஸ் முடிவதில்லை, இழுத்து கொண்டே போகிறது. இதனால் ரவுடிகள் எளிதில் எஸ்கேப் ஆக வாய்ப்பும் உள்ளது. ஆறாவது காரணம், ஒரு ரவுடி புனைப்பெயருடன் உலா வந்து, ஊருக்குள் உதார் விட்டு திரிந்தால், அவருக்கு செல்வாக்கு மிக்கவர் பின்னணியில் இருக்கிறார் என்ற பலம்தான்.
இழுத்தடிக்கும் கேஸ்கள்
இப்படி எக்கச்சக்க குறைகள் இருப்பதால்தான் பட்டப்பெயர்களுடன் ரவுடிகள் அதிகமாக உலா வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு என்னதான் தீர்வு? எப்படி இந்த ரவுடிகன் அட்டகாசத்தை குறைப்பது? முதலில் ரவுடிகளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் ஏற்படும் வகையில் போலீசார் நடந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான், உடனுக்குடன் குற்றவாளிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒரு கேஸ் இழுத்து கொண்டே போனால் ரவுடிகளுக்கு இது சவுகரியமாகதான் போகும்.
கடுமையான தண்டனை
அதோடு ரவுடிகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை தீவிர கண்காணிப்புடன் செயல்படுத்த வேண்டும். ரவுடிகள் குறித்த ஒரு புகார் வந்திருந்தால்கூட போலீசார் சுதாரித்து சம்பந்தப்பட்டவரை மடக்கி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளுக்கு கோர்ட் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். நீதிபதி கொடுக்கும் தண்டனை, அடுத்த ரவுடி தலைதூக்கவே பயப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள்
அதேபோல இந்த ரவுடிகள் இப்போது பெண் போலீசையும் மிரட்ட தொடங்கிவிட்டனர். அதனால் பெண் போலீசாருக்கு எந்தவித இடர்பாடுகளும் இந்த ரவுடிகளால் ஏற்படக்கூடாது. மேலும் போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் முதல் கொலை வரை செய்யும் குற்றவாளிகளை பிடித்தாலும், அரசியல் கட்சிகளின் செல்வாக்கினால் ஒரே போனில் வெளிவந்து விடுகிறார்கள்.
வருங்கால உயிர்க்கொல்லி
இதற்கு ஒரு சில போலீசாரும் உடந்தையாகவே இருக்கின்றனர். எனவே போலீஸ் துறை அரசிடம் இருக்க கூடாது. அது ஒரு தனி அமைப்பாக இருந்தால்தான் சட்டம் தன் கடமையை செய்ய எளிதாக இருக்கும். தனது தவறுகளையும், குற்றங்களையும் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துவக்கத்தில் ஆதரித்து அரவணைத்தாலும் அவர்கள்தான் வருங்கால உயிர்க்கொல்லி என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
மீண்டும் ரவுடி உருவாகிறான்
சமூகத்திலிருந்து குற்றங்களையும், குற்றங்களிலிருந்து குற்றவாளிகளையும் தனியாக பிரித்து, கடைசியில் குற்றவாளியை மட்டும் இழுத்து சென்று, அவனை சிறையில் அடைத்து விடுகிறது. அல்லது அவனை சுட்டு கொன்றுவிடுகிறது. ஆனால் குற்றங்களும், அந்த குற்றங்கள் உருவாவதற்கான சமுதாய சூழல்களும் தொடர்ந்து நீடிக்கத்தான் செய்கிறது. இதன் விளைவு... மீண்டும் இன்னொரு ரவுடி கொஞ்சநாளில் உருவாகி விடுவான் என்பதே! அது ரவுடி ஆனந்தன் ஆகட்டும், புல்லட் நாகராஜ் ஆகட்டும்!!