சென்னை ஏர்போர்ட்டில் மொபைல் உதிரி பாகங்கள் பார்சலில் 16 கிலோ தங்கம்...!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்த பார்சலில் 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 5.3 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனியன்று விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் நூதன முறையில் விமான இருக்கைகளில் மறைத்து, தைத்து கொண்டுவரப்பட்ட 8கிலோ தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், செல்போன் உதிரிபாகங்கள் எனப் பெயர் எழுதப்பட்ட பார்சல் ஒன்று கடந்த நான்கைந்து தினங்களாக யாரும் உரிமைக் கோரி வராததால் கேட்பாரின்றி விமான நிலைய பார்சல் குடோனில் கிடந்துள்ளது. இதற்கிடையே அதிகளவிலான தங்கம் கடத்தப் பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிபடையில், சந்தேகத்தின் பேரில் அப்பார்சலைப் பிரித்த போது, பார்சலின் மேல் அடுக்கில் மட்டும் மொபைல் போன்களும் அதனடியில் தங்கக் கட்டிகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கைப்பற்றப்பட்ட மொத்தத் தங்கத்தின் மதிப்பு 16 கிலோ என்றும் அவற்றின் ரூபாய் மதிப்பு 5.3 கோடி ரூபாய் என மதிப்பிட்ட அதிகாரிகள் அதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.