பணம் ஒதுக்கியும் கட்டப்படாத சித்த மருத்துவப் பிரிவு.. அலட்சியத்தில் அதிகாரிகள்.. நோயாளிகள் தவிப்பு
நிதி ஒதுக்கியும் சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் கட்டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
நெல்லை: சித்த மருத்துவக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கியும் புதிய கட்டடம் கட்டப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கொதிப்பில் உள்ளனர்.
நெல்லையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி 53 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு சித்த மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இங்கு முதுநிலை படிப்புகளும், நர்சிங் படிப்புகளும் உள்ளன. நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவு, மருந்துகள் தயாரிக்கும் இடம் உள்பட சகல வசதிகளும் உள்ளன.

இங்கு நாள் தோறும் சுமார் 500 முதல் 1000 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் குழந்தைகளுக்கென்று தனி பிரிவு கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி 30 வருடங்கள் ஆவதால் இந்த கட்டடத்தை இடித்து விட்டு கல்லூரி வளாகத்தில் ஆய்வு கூடம், மாணவர்களுக்கான தேர்வுக் கூடம் ஆகியவைகளுக்கான கட்டடங்கள் கட்ட கடந்த 2012ம் ஆண்டு சிறப்புக் குழு ஆய்வு நடத்தியது.
உடனடியாக 3 மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. தனியாக செயல்பட்டு வந்த குழந்தைகள் வார்டு, அருகே வாகனங்கள் நிறுத்தப்படும் இரு அறைகள், மூலிகை கிடங்கு ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக குழந்தைகள் வார்டு கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இழுத்து மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் பிரதான கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் குறிப்பிட்டபடி பழைய கட்டடத்தை இடிக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் இடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications