குடிநீர் வரி, மின் கட்டணத்துக்கு பழைய நோட்டுக்கள் வாங்க உத்தரவு
வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை பழைய 500 மற்றும் 1000நோட்டுக்கள் வாங்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு வரை பழைய நோட்டுக்கள் வாங்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அறிவித்தது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 100, 50, 20, 10, ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாவதில் எந்த பாதிப்புமில்லை என்றாலும் சில்லறைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசின் செய்திக்குறிப்பில் அரசு மருத்துவமனை, மருந்தகம் மருத்துவர் சீட்டின் பேரில், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் நுழைவாயில்கள், விமான பயணச்சீட்டு நுழைவாயி்ல்கள், அரசு பேருந்துகள், பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு நிலையங்கள், மாநில அல்லது நடுவண் அரசின் அங்கீகரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள், மாநில அரசு பால் அங்காடிகள், சுடுகாடு, இடுகாடு மைதானம் போன்றவற்றில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் வராததால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் 09-11-2016 முதல் வசூலிக்கப்பட மாட்டாது. எனினும் மின்நுகர்வோர்களின் வசதிக்காக கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் வருகிற 9ம் தேதி முதல் 30ம் தேதி வரையாக இருப்பின் அந்த இறுதிநாள் மேலும் ஒரு வாரத்திற்கு கீழ்க்கண்டவாறு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது. இத்தருணத்தில் மின்கழகம் தாமதக் கட்டணமின்றி வசூலிக்கப்படுவதோடு மின்கட்டணம் செலுத்த கடைசிநாள் 9-ந் தேதியாக இருந்தால் அது 16ம் தேதி ஆகவும், அவ்வாறே கடைசி நாள் 30ம் தேதியாக இருப்பின் 7ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி முதல் செலுத்தவிருக்கும் ஒப்பந்த புள்ளிகளுக்கான வைப்புத்தொகை பணமாகவோ அல்லது இதர வகையில் பெறவிருக்கும் தொகையினை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக வசூலிக்கப்படமாட்டது என்பதை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை நள்ளிரவு வரை வாங்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தமிழகம், புதுச்சேரியில் மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.