தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் மீது ஆளுங்கட்சி நிர்வாகி திடீர் தாக்குதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் நட்டர்ஜியை ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் திடீர் என்று தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நட்டர்ஜி. எந்த கோஷ்டியையும் சேராதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இதனாலேயே அவருக்கு வேட்பாளர் யோகம் அடித்தது. அன்று முதல் மனிதர் இரவு பகல் என தூக்கம் இன்றி வாக்கு சேகரித்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் நட்டர்ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது இலுப்பையூரணி என்ற இடத்தில் வேட்பாளர் ஜீப்பில் தொகுதி பொறுப்பாளர் மாணிக்கராஜ் ஏற முயன்றார். அதை ஜீப் மேல் இருந்த ஒருவர் தடுத்துவிட்டார். இதே போல மாணிக்கராஜை பல இடங்களில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணிக்கராஜ், எனது பகுதியில் எனக்கு தெரியாமல் அழைப்பு அனுப்பாமல் எப்படி வாக்கு சேகரிக்க வரலாம் என கூறி, அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இதை சற்றும் எதிர்பாராத நட்டர்ஜி நிலை குலைந்து போனாராம்.
இந்த தகவல் காட்டுத் தீ போல பரவ, பதட்டம் அடைந்த நட்டர்ஜி, தேர்தல் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும், தேர்தல் முடியட்டும் அம்மாவிடம் புகார் சொல்வோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என தனது ஆதரவாளர்களை சமாதானம் செய்தாராம்.
இந்த தகவல் உளவுத்துறை மூலம் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும், விரைவில் மாணிக்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications