புனிதா பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு வழக்கறிஞராக சந்திரசேகர் நியமனம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், மகிளா நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக எஸ்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அந்த நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக உள்ள எஸ்.சந்திரசேகர், கூடுதல் பொறுப்பாக மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞராக செயல்பட மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி புனிதா கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இனியாவது வழக்கு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.