கொடநாடு கொலையில் சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனுக்கும் வருமான வரித்துறை கிடுக்குப்பிடி!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளையின் போது சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனின் மர மில்கள் மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் தவிர அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளையின் போது சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜிவனின் மர மில் மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சளிக்காத குறையாத ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். கொடநாடு பங்களாவில் தனிச் செயலாளராக உள்ள நடராஜனிடம் தனி அறையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கொடநாடு பங்களாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட அறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மர வியாபாரி சஜீவனின் மர மில்கள் மற்றும் பர்னிச்சர் கடை உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் இருக்கும் மரச்சாமான்கள் அனைத்தும் இவரின் வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டன.
கொடநாடு கொலையிலேயே இவர் மீது மிகுந்த சந்தேகப்பார்வை விழுந்தது ஆனால் அப்போதே சசிகலாவின் பெயரை சொல்லி தப்பித்தார் சஜீவன். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது வியாபார ஸ்தாபனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் இருக்கும் சஜீவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications