கொஞ்சம் கூட யோசிக்காதீங்க.. விலையும் கம்மிதான்.. உடனே சிசிடிவி கேமரா வாங்குங்க, பொருத்துங்க!
சென்னை: வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு இல்லை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் அங்கும் பாதுகாப்பு இல்லை. குற்றங்களைத்தான் தடுக்க முடியவில்லை என்றால் குற்றம் புரிந்த நபர்களைக் கண்டுபிடிக்கவும் போதிய வசதிகள் நமது நகரங்களில் இல்லை என்பது மிகப் பெரிய சோகமாக உள்ளது. சென்னையில் சமீப காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எதிரொலியாக, வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.
சென்னையில் சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல வக்கீல்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களும் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். லேட்டஸ்டாக நுங்கம்பாக்கத்தில் நடந்த இளம் பெண் சுவாதி கொல்லப்பட்ட விதம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
இத்தகைய செயல்களால் ஆடிப் போயுள்ள மக்கள் தங்களது சுய பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். சமீபத்திய குற்றச் செயல்கள் அதிகரிப்பால், சிசிடிவி கேமராக்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம்.

பாதுகாப்பு சாதனங்கள்
வீடியோ டோர் போன், கார்டு போட்டு ஸ்வைப் செய்தால் திறக்கக் கூடிய பூட்டுகள், சிசிடிவி கேமராக்கள், எலக்ட்ரானிக் பர்க்ளர் அலார்ம் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாம்.

ரிச்சி தெரு
சென்னை ரிச்சி தெரு மின்னணு சாதனங்களின் விற்பனைக்குப் பெயர் போனது. இங்கு போனால் அனைத்து விதமான மின்னணு பொருட்களையும் வாங்க முடியும். விலையும் சகாயமாக இருக்கும்.

கம்ப்யூட்டரைத் தூக்கிப் போடு
தற்போது மக்களிடையே சிசிடிவி கேமராக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் வியாபாரமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான பொருட்களை விற்பதை விட இதுபோன்ற பாதுகாப்பு சாதனங்களை விற்பதில் ரிச்சி தெரு வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஒரு சிசிடிவி கேமரா ரூ. 1250 மட்டும்தான்
சிசிடிவி கேமராக்களின் விலையும் தற்போது நன்றாக குறைந்து விட்டது. ஒரு அதி நவீன எச்டி சிசிடிவி கேமராவின் விலை ரூ. 1250தான். நான்கு கேமரா வரை வீடியோ பதிவுடன் பொருத்துவதற்கு மொத்தமே ரூ. 10,000க்குள்தான் ஆகிறதாம். எனவே இவற்றை வாங்க பலரும் விருப்பப்படுகின்றனர்.

வீடியோ டோர் போன்
வீடியோ டோர் போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதன் விலை ரூ. 4500 முதல் 7500 வரை ரகத்திற்கு ஏற்ப உள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் கூட பாதுகாப்பு அம்சத்தைக் கருத்தில் கொண்டு இதை வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்.

பர்க்ளர் அலார்ம்
அதேபோல பர்க்ளர் அலார்ம் ஒன்றின் விலை ரூ. 6000 முதல் உள்ளது. இதை வாங்குவோரும் அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு முக்கியம்
செலவை விட பாதுகாப்பு முக்கியம் என்று கருதுவோர் அதிகரித்து விட்டதால் இவற்றின் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கி வருகின்றனராம். வீடுகளில் அதிக அளவில் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அதிகரித்துள்ளது.

தெரு முனைகளில்
முன்பு போலீஸாரே தெரு முனைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி வந்தனர். தற்போது குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள் இதில் குதித்துள்ளன. தங்களது பகுதிகளில் உள்ள முக்கிய இடங்கள், கட்டடங்கள், தெரு முனைகள் உள்ளிட்டவற்றில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த ஆரம்பித்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications