போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை விற்க முயன்ற எஸ்.ஐ: நடவடிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற எஸ்ஐ மீது நடவடிக்ரக எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் குமரேசன். தென்பாகம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். கோமஸ்புரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை குமரேசன் போலி ஆவணம் தயாரித்து பிளாட்டுகளாக மாற்றி விற்க முயன்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதி சிலுவைப்பட்டியை சேர்ந்த கருவாட்டு வியாபாரி அருண் என்பவர் தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் தெரிவித்தார் ஆனால் அந்த புகார் மனு மீது எஸ்.ஐ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்றதாகவும் சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும் 3 பிரிவுகளின் கீழ் குமரேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்ஐ மீது நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிற காவல்துறையினர் பதட்டத்தில் உள்ளனர்.