டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல்! சேலம் ஆட்சியர் ரோகிணிஅதிரடி உத்தரவு
சேலம் மாவட்டத்தில் டெங்குவை பரப்பும் ஹோட்டல்கள், பஞ்சர் கடைகள் உள்ளிட்ட கடைகளை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்: டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல் வைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டுள்ளார். மேலும், பொது இடத்தில் பிளாஸ்டிக் கப்புகள், டயர்களை கொட்டிவைக்கும் ஹோட்டல், கடைகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் ரோகிணி, சேலம் மாவட்ட கிராமங்களில் சுகாதார பணிகள் செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் விளக்கமாகக் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கிராமங்களில் தூய்மை மாஸ்கேம்ப் நடத்த வேண்டும். பொதுமக்களை இணைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாக்கடை தூய்மை பணிகள், தண்ணீர் விநியோகிப்பாளர் பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்று ஆட்சியர் ஆலோசனைகள் வழங்கினார்.
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வும், டீ கடைகள், ஹோட்டல்கள், டயர் பஞ்சர் போடும் கடைகள் உள்ளிட்டவரை ஆய்வு செய்து அகற்றவும் ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவை சரியாக பின்பற்றாத கடைகள், ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். நோட்டீஸ் வழங்கிய பிறகும் சுகாதார சீர்கேட்டை கடை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்களை நடத்தவும், அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோனைகள் வழங்கினார்.