துரத்தும் நீட் தேர்வு பயம்.. பாலிதீன் கவருக்குள் பரிதாபமாக முடிந்து போன கெவின்!
மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சேலம்: முகத்தில் பாலிதீன் கவரை கட்டிக்கொண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பிள்ளைகளை மருத்துவராக்கி பார்க்க கனவுகாணும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தமிழ் சங்க சாலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். கருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இன்ஜினியராக பணிபுரிகிறார். அவரது மகன் கெவின்ஹரி, கடந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் 1056 மதிப்பெண் பெற்றிருக்கிறார். மருத்துவம் பயில ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதி 213 மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால் அவரால் மருத்துவம் சேர முடியவில்லை. இதனால் பெற்றோரிடம் எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகி விடுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மகனின் உறுதியும் தன்னம்பிக்கையும் லட்சியத்தையும் கண்ட பெற்றோர் ஆச்சயரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

எனவே கெவினுக்கு வீட்டில் படிப்பதற்காக தனி அறை ஒதுக்கிக் கொடுத்ததுடன், மேலும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். கெவினும் விடிய, விடிய படித்துக் கொண்டிருப்பாராம். இதை தவிர 'நீட்' தேர்வு எழுத, சேலத்திலுள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றும் வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி வரை கெவின் படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, தாய் மேரி ரோஸ்லின், அவரது அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டியிருந்ததால், நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த லாரன்ஸ், கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, தலையிலிருந்து கழுத்து வரை பிளாஸ்டிக் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு, ஷூ கயிற்றால் கழுத்தைக் கட்டி மூச்சுத்திணறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அனிதாவுக்கு வந்த நிலை இன்னொருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பதற்குள் அடுத்த மரணம் நம்மை உலுக்கி போட்டு விடுகிறது. மத்திய அரசு மாணவர்களின் மேல் செலுத்தும் இந்த கல்வி வன்முறைக்கு என்று தீர்வு ஏற்பட போகிறதோ தெரியவில்லை. அனிதாவின் மரணத்தின்போது, யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக பொதுமக்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராடி கதறியும் மத்திய அரசின் காதுகளில் இதுவரை விழாமல் உள்ளது. ஒரு தலைமுறையின் பெருங்கனவையே இந்த தேசம் சிதைத்து கொண்டிருக்கிறது வேதனையளிக்கிறது.
மாணவர்களே, நீட் தேர்வு குறித்து சொல்ல முடியாத மனநோயில் சிக்கி தவிப்பதிலிருந்து முதலில் வெளியே வாருங்கள், உங்களுக்கான வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை... கல்லும் முள்ளும் இல்லாத மலர்ப்பாதையை உங்களுக்காக பெற்றோர் விரிக்கும்போது இந்த விபரீத முடிவுகளை தேடி ஏன் போக வேண்டும்? நிலத்தை பயன்படுத்தி வீரியமுள்ள விதைகளை விதைக்க தயாராகுங்கள். அப்போதுதான் உங்களது இலக்கு என்ற அறுவடையை சிறப்பாக பெற முடியும். அதேபோல, தேர்வுகளையும் மதிப்பெண்களையும்விட உயிர் வாழ்வது மிக முக்கியமானது என்பதை, ஒவ்வொரு பிள்ளைகளுக்கு உணர வைப்பது ஆசிரியர்கள், பெற்றோரின் இன்றியமையாத கடமை ஆகும்.












Click it and Unblock the Notifications