ரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா?.. திருடர்களை கண்டுபிடிச்சுட்டாங்களாம்!
சேலம் ரயில் கொள்ளை குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
Recommended Video
சேலம்: பழைய ரூபாய் நோட்டு... ரயிலின் கூரையில் ஓட்டை.. கொள்ளை... இதெல்லாம் ஞாபகம் இருக்கா?
இந்த கேஸைதான் தூசி தட்டி திரும்பவும் எடுத்து அலசி ஆராய ஆரம்பித்து, துப்பு துலக்க போகிறார்கள் போலீசார்.
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஓபி வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் 228 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. அப்போது ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு அதனுள் நுழைந்த ஆசாமிகள், அத்தனை பெட்டிகளையும் அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி என கூறப்பட்டது.
திணறிய போலீசார்
தொகையோ பெரியது... பெட்டிகளோ நிறைய... இடமோ பரபரப்பான 'எக்மார் ரயில்வே ஸ்டேஷன்'... இந்த கொள்ளை எப்படி, எப்போது, யாரால், எங்கே தொடங்கி நடைபெற்றது என்பதை யோசித்து முடிக்கவே போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். சாதாரண கொள்ளை என நினைத்து முதலில் ரயில்வே போலீசார்தான் இதை விசாரிக்க வந்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்தபோதுதான் விபரீதம் புரிந்தது.
2 வருடம் கழித்து விசாரணை
அடுத்து சிபிசிஐடி போலீசார் இதனை கையிலெடுத்தனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காமிரா முதற்கொண்டு, வந்தவர், போனவர், பார்சல் ஊழியர்கள், பெட்டி தூக்கும் போர்ட்டர்கள் வரை விசாரித்துவிட்டார்கள். எதுவுமே பிடிபடவில்லை. ஆனால் 2 வருடம் கழித்து இப்போது இந்த கொள்ளையில் இறங்கியவர்கள் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டதாம்.
ம.பி. மற்றும் பீகார்
இதனை சிபிசிஐடி போலீசாரே தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த 4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்கும் என்கின்றனர். சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்தில் மர்மசெல்போன் எண்கள் இயங்கிவந்ததை கொண்டு இதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த மர்ம போன்கள் எல்லாமே மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறதாம். அதோடு இந்த பலே ஆட்கள் தங்கள் மாநிலத்திலேயே பல இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகம்
ஆனால் இந்த ரயில் கொள்ளை விவகாரத்தில் சிபிசிஐடிக்கு பக்கபலமாக இருந்து உதவியது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்தான். எப்படி தெரியுமா? ஏற்கனவே இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த சிபிசிஐடி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உதவி கோரியது. அதை ஏற்றுதான் நாசா உதவி செய்ய முன்வந்தது.
தோள்கொடுத்த நாசா
அதன்படி சேலத்தில் இருந்து எழும்பூர் அந்த வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து சிபிசிஐடி-க்கு தோள் கொடுத்தது. அந்த படங்களின் அடிப்படையில்தான் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிக்கிய க்ளூதான், சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்திற்கு வந்த மர்மசெல்போன்கள். இவ்வளவையும் கண்டுபிடித்துவிட்ட சிபிசிஐடி போலீசார், விரைவில் அவர்களை கைது செய்தும் விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லைதான்!