கலாமுக்கு பிடித்த சாம்பார் சாதம், தேங்காய் சட்னி, புளியோதரை
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது தாய் ஆசியம்மா சமைத்த சாம்பார், சாதம் மற்றும் தேங்காய் சட்னி தான் பிடித்த உணவு ஆகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எளிமையின் உருவமாக வாழ்ந்தவர். குடும்பம் ஏழ்மையில் இருந்தாலும் தனது கனவை மட்டும் கலையவிடாமல் பார்த்துக் கொண்டவர். சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார்.
கலாம் 1950களில் இருந்து சைவத்திற்கு மாறி இறுதிவரை சைவப் பிரியராகவே இருந்தார்.
சாம்பார்
அப்துல் கலாமுக்கு அவரது தாய் ஆசியம்மா சமையல் தான் மிகவும் பிடிக்கும். அவர் அம்மா செல்லமாக இருந்தார். ஆசியம்மா சமைத்த சாம்பார், சாதம், தேங்காய் சட்னி தான் கலாமுக்கு பிடித்த உணவு ஆகும்.
புளியோதரை
கலாம் தனது தினசரி உணவில் பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அவருக்கு வெந்தயக் குழம்பு மற்றும் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும்.
சைவம் ஏன்?
1950களில் கலாம் திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அவரால் அசைவ உணவுக்கு பணம் செலுத்த முடியவில்லை. வறுமையால் அவர் சைவத்திற்கு மாறினார்.
பணம்
பணம் இல்லாததால் நான் சைவத்திற்கு மாறினேன். ஆனால் அதுவே எனக்கு பிடித்துவிட்டது. இன்று நான் 100 சதவீதம் சைவப்பிரியர் ஆவேன். எங்கு சென்றாலும் சூடான சைவ உணவு இருந்தால் அதுவே எனக்கு போதும். குஜராத் சென்றால் அம்மாநில உணவை சாப்பிடுவேன், ஷில்லாங் சென்றால் வடகிழக்கு உணவை சாப்பிடுவேன் என்று கலாம் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்திருந்தார்.