சனிப்பெயர்ச்சி: டிச.16ல் திருநள்ளாறில் சிறப்பு பூஜைகள்
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, டிசம்பர் 16ஆம் தேதி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நீராட வரும் பக்தர்களுக்கு வசதியாக பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தத்தைத் தூர்வாரும் பணிகளை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பரிகார பூஜைகளில் பங்கேற்று தோஷ நிவர்த்தி செய்துகொள்வார்கள்.
திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நள தீர்த்தத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும், கோயில் அருகே உள்ள சரஸ்வதி தீர்த்தம், பிரம்ம தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நள தீர்த்தத்தில் பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடைகளை அகற்றுதல், குளத்தின் தண்ணீரை அவ்வப்போது அப்புறப்படுத்துதல், குளத்தின் அருகே மற்றொரு ஆழ்குழாய் அமைத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆதியவற்றில் உள்ள தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளது. குளத்தை ஆழப்படுத்தி, படிகள், குளத்தில் உள்ள தடுப்பு வேலிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சரஸ்வதி தீர்த்தத்தின் ஒரு பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இவை சுமார் ரூ. 10 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தீர்த்தங்களின் நடுப் பகுதியில் உள்ள மண்டபத்தில் அமைந்த சரஸ்வதி, பிரம்மன் சிலைகள், மண்டபம் வண்ணம் பூசி அழகுபடுத்தப்படவுள்ளன என்று தெரிவித்தனர்.
சனிப்பெயர்ச்சி தினத்தன்று சிறப்பு அபிஷேக கட்டணம் ரூ.300 எனவும், சகஸ்ராநாம அர்ச்சனை கட்டணம் ரூ.200 எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேரில் வர முடியாத பக்தர்கள் டிடி எடுத்தும் அனுப்பலாம்.
மேலும் விபரங்களுக்கு http://thirunallarutemple.org/Sanipeyarchi/Sanipeyarchi2014-tamil.pdf, http://thirunallarutemple.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.