சிவாஜி மணிமண்டபம்… ஜெ.வை புகழ்ந்த சரத்குமார்… கொதித்த திமுக உறுப்பினர்கள்
சென்னை: தி.மு.க. அரசு சிவாஜி மணிமண்டபம் கட்டுவோம் என்றார்கள். ஆனால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தற்காக நன்றி தெரிவிக்கிறேன் என்று சரத்குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டசபையில் சரத்குமார் பேசிய பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்கவில்லை. இதனால் இன்று சட்டசபையில் பங்கேற்ற சரத்குமார் கேள்வி நேரத்தின் போது எழுந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
சரத்குமார் நன்றி
சோதனைகளை கடந்து சாதனை படைத்து 5வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள புரட்சித் தலைவி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தற்காக நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
சிலையும் நிறுவுங்கள்
மணி மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி சிலையும் நிறுவப்பட வேண்டும் என்றார். தி.மு.க. அரசு நாங்களே கட்டுவோம் என்றார்கள். ஆனால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையிலும் மணி மண்டபம் கட்டுவதாக அறிவித்து இருந்தார்கள் என்று குறிப்பிட்டார்.
திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆவேசத்துடன் கேள்வி நேரத்தின் போது மூலக்கேள்விதான் கேட்க வேண்டும். ஆனால் இவர் தேவையில்லாமல் பேசுகிறார். இவர் பேசுவது மூலகேள்விக்கு தொடர்பே கிடையாது என்றார்.
சபாநாயகர் எச்சரிக்கை
இதனால் சபையில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சபாநாயகர் குறுக்கிட்டு சிவசங்கர் எம்.எல்.ஏ.வை எச்சரித்தார். கையை உயர்த்தி பேசுவது ஒழுங்கீனம். இது சரியில்லை. நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
அப்போது சபாநாயகருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்வரை வாழ்த்தி பேசுவதை தவறு என சொல்ல முடியாது என்றார். ஆனாலும் வாக்குவாதம் தொடர்ந்தது.
துரைமுருகன் கோரிக்கை
அப்போது தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் சபைக்குள் வந்தார். வாக்குவாதம் நடந்ததை பார்த்து விட்டு ‘கேள்வி நேரத்தின் போது எந்த உறுப்பினரும் குற்றச்சாட்டு சொல்லி பேசக்கூடாது. ஆனால் சரத்குமார் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதாக தி.மு.க. அறிவித்து இருந்ததாக கூறினார். அது தவறான செய்தி. அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். உடனே சரத்குமார், ‘தேர்தல் அறிக்கையில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதாக கூறியிருப்பதைதான் சுட்டி காட்டியதாக கூறினார்.
ஓ.பி.எஸ் முற்றுப்புள்ளி
அதுவரை நடந்த வாக்குவாதங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கேள்வி நேரத்தில் கேள்வியை கேளுங்கள் என்று வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.