ஹைகோர்ட் உள்ளது, சுப்ரீம் கோர்ட் உள்ளது, ஜெயலலிதா நிச்சயம் வெளியே வருவார் - சரத்குமார்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டது இறுதித் தீர்ப்பு இல்லை. இதை விட்டால் உயர்நீதிமன்றம் இருக்கிறது, உச்சநீதிமன்றம் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவைப் பார்க்கப் போய் சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார்.
ஜெயலலிதாவைச் சந்திக்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றிருந்தார் சரத்குமார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் சரத்குமார்.

எப்படி சமமாகும்
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீர்ப்பு வெளியான பின்பு சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வழக்கு பொய்யாக தொடரப்பட்டதாகும். அப்படி இருக்கும் போது சட்டத்திற்கு முன்பு ஜெயலலிதாவும் சமம் என்று எப்படி சொல்ல முடியும்.

நல்லாட்சி புரிந்தவர் ஜெ.
18 ஆண்டுகளாக நடந்த வழக்கின் போது 2 முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்து நல்லாட்சி புரிந்துள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவை
மக்களுக்கு சிறந்த சேவையை ஜெயலலிதா ஆற்றி வந்திருக்கிறார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால், தமிழகமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.

விடுதலையாகி வருவார்
டான்சி வழக்கில் எப்படி ஜெயலலிதா விடுதலை ஆனாரோ? அதுபோல இந்த வழக்கில் இருந்தும் விடுதலையாகி வெளியே வருவார்.

ஜெத்மலானியே சொல்லிட்டாரே
சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி கூட சட்ட விதிகளை தாண்டி தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்து உள்ளார்.

234 தொகுதிகளிலும் வெல்வார்
வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார். தடைகளை உடைத்தெரிந்து, மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பார்.

நாங்க எப்பவுமே சப்போர்ட்தான்
சமத்துவ மக்கள் கட்சி எப்போதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

இது இறுதியல்ல
இந்த வழக்கின் தீர்ப்பு, இறுதியானது என்று சொல்ல முடியாது. இன்னும் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications