அதிக சீட்டு தந்தா கூட்டணி.. இல்லாட்டி, தனியே தன்னந்தனியே.. சரத்குமார்
ஈரோடு: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிகளவில் சீட்டு அளிக்கும் கூட்டணியில் இடம் பெறுவோம், இல்லையேல் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளன. அதோடு மக்களை சந்திக்கும் பணிகளையும் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ‘மாற் றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு' என்ற பயணத்தை தொடங்கியுள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்...
இதன் ஒரு பகுதியாக ஈரோடு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘60 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக சட்டசபையில் நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
கெயில் நிறுவனம்...
விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் கொண்டு சென்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்தத் திட்டத்தை கெயில் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கூட்டணி...
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகி களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஒரு வாரகாலத்துக்குள் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
தனித்துப் போட்டி...
கட்சியில் அதிகம் பேர் போட்டியிட விரும்புவதால், அதிகளவில் சீட்டு அளிக்கும் கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணியில் குறைவான இடங்கள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
நடிகர் சங்க வளர்ச்சி...
நடிகர் சங்க வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்' என்றார்.
இளைஞர்களின் ஆதிக்கம்...
இதேபோல், பவானியில் அந்தியூர் பிரிவு சாலையில் மக்களிடையே பேசுகையில், ‘எதிர்காலத்தில் இந்தியாவில் இளைஞர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவர். கட்சி நடத்துபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக ஆசைப்படுவது இயல்புதான்.
முதல்வர் ஆசை...
எனக்கும் முதல்வர் ஆசை உள்ளது. இது முன்னோட்ட சந்திப்புதான். தேர்தல் நேரத்தில் மீண்டும் நான் உங்களை சந்திக்க வருவேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.