தினகரனுக்குப் பதில் செங்கோட்டையனுக்கு பதவி கொடுக்காமல் விட்டது என் தப்புதான்.. சிறையில் புலம்பிய சசி
அதிமுக துணைப் பொதுச்செயலராக செங்கோட்டையனை நியமித்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது என சிறையில் புலம்பியிருக்கிறாராம் சசிகலா.
Recommended Video
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும்போது தினகரனுக்கு பதிலாக செங்கோட்டையனுக்கு துணை பொதுச்செயலர் பதவி கொடுத்திருந்தால் குடும்பத்துக்கு எதிராக கட்சியே திரும்பியிருக்காது என பெங்களூரு சிறையில் புலம்பினாராம் சசிகலா.
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலராக நியமித்தது ரத்து உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியதில் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சியில்தான் இருக்கிறதாம். இனி நாம் அவ்வளவுதானா? டெல்லியோடு கூட்டு சேர்ந்து நம்மை ஒழித்துவிட்டார்களே எனக் குமுறுகின்றனராம்.
தினகரனை முன்னிறுத்தாமல் இருந்திருந்தால் இப்படியொரு இழப்புக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை என சொந்தங்களிடம் ஆதங்கப்பட்டாராம் சசிகலா. சசிகலாவை சில நாட்களுக்கு முன்னர் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளனர் அவரது உறவினர்கள்.
செங்கோட்டையனுக்கு பதவி
அப்போது, பொதுக்குழுவில் உங்களைக் கட்டம் கட்டும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என கூறியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதும், கட்சியை வழிநடத்த துணைப் பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டு வந்தேன். இந்தப் பதவியில் தினகரனுக்குப் பதிலாக அப்போதே செங்கோட்டையனை நியமித்திருக்கலாம்.
குடும்ப அரசியல் விமர்சனம்
அந்தநேரத்தில் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நம் பக்கம் உறுதியாக நின்றார் செங்கோட்டையன். துணைப் பொதுச் செயலாளராக அவர் இருந்திருந்தால், இப்படியொரு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய அவசியமே வந்திருக்காது. எடப்பாடி பழனிசாமியும் நம் பக்கம் இருந்திருப்பார். குடும்ப அரசியல் என்ற விமர்சனமும் வந்திருக்காது என புலம்பினாராம்.
தினகரனால் சிக்கல்
அத்துடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டு, போராடாமல் தினகரன் அமைதியாக இருந்தது சரியான செயல் அல்ல. தினகரன் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவரை வளர்ப்பு மகனாகத்தான் பதவிகளில் அமர வைத்தேன். அவருடைய செயல்பாடுகளால்தான் இவ்வளவு சிக்கல்களும்' என வேதனையோடும் சசிகலா பேசியிருக்கிறார்.
சசிகலா குடும்பமும் அதிமுகவும்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், அ.தி.மு.கவில் எம்.பி, கட்சிப் பதவி என சில பதவிகளில் அமர்ந்திருந்தாலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியே இருந்தார் தினகரன். காரணம், ஜெயலலிதா காட்டிய கோபம்தான். அப்படிப்பட்டவருக்கு சசிகலா மூலமாகத்தான் இன்னொரு வாய்ப்பு வந்து சேர்ந்தது. அனைவரையும் அரவணைத்துச் செல்லாமல் செயல்பட்டதன் விளைவை இப்போது குடும்பத்தினர் அனுபவிக்கின்றனர். அவரது நடவடிக்கையைப் பொறுத்தே அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்றார்.