சித்தப்பாடா... மாமாடா.. மருமகன்டா.. எடப்பாடியை வீழ்த்த கை கோர்த்த 'மும்மூர்த்திகள்'
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை வீழ்த்த சசிகலா குடும்பமே கை கோர்த்து செயல்படுவது அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த சசிகலா தரப்பினர் அனைவரும் ஒன்றாக கைகோர்த்திருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி, சசிகலா குடும்பத்தின் பக்கம் கட்சியைத் திசை திருப்பும் வேலைகள் நடந்து வருவதை உணர்ந்து வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. நடிகர் கமல்ஹாசனைத் தூண்டிவிடுவதும் இதன் ஒருபகுதிதானோ என சந்தேகிக்கிறது கொங்கு கோஷ்டி.
தமிழக அரசின் சார்பில் திறக்கப்படும் புதிய கட்டடங்களில் ஜெயலலிதா படத்தைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்களே பிரதான இடத்தைப் பிடிக்கின்றன. அரசு அலுவலகங்களிலும் அவர் படமே மாட்டப்படுகிறது. அந்தளவுக்கு இது என்னுடைய அரசு என்பதை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடியார்.
ஊழல் ஆட்சி
இந்த அணுகுமுறையை சசிகலா தரப்பினர் சிறிதும் விரும்பவில்லை. இது அம்மா ஆட்சி அல்ல. ஊழல் ஆட்சி என்ற முத்திரையை உருவாக்கி, மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் தினகரன்.
காங்கிரஸ் மீது நம்பிக்கை
எடப்பாடிக்கு அரசுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவதற்கு இரண்டு வாரகாலமே அவகாசம் உள்ள நிலையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறாராம் தினகரன். அத்துடன் எதைப் பற்றி விவாதிப்பது என்றாலும் சசிகலா குடும்ப உறவுகள் ஆற அமர்ந்து பேசுகின்றனர். 30 ஆண்டுகாலமாக எதற்காகக் காத்திருந்தோமோ, அவையெல்லாம் நம் கையைவிட்டு நழுவி சென்றுவிட்டன. இன்னும் எத்தனை நாளைக்கு டெல்லி இவர்களை காப்பாற்றும் என்று பார்ப்போம். அதிகாரம் பறிபோய்விட்டால், இவர்கள் எல்லாம் ஓடிவிடுவார்கள். மக்கள் மத்தியில் பா.ஜ.க அரசுக்குக் கெட்டபெயர்தான் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், உறுதியாக மோடி வெல்ல மாட்டார். இவர்களைப் போல காங்கிரஸ் கட்சி மோசமாக நடந்து கொள்ளாது என நம்பிக்கையோடு உள்ளனர்.
எடப்பாடி மீது கோபம்
நீரா பானம் அறிவிப்பு, 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் என வேகமாக செயல்பட விரும்புகிறார் எடப்பாடி. இப்படியே போனால், அதிகாரத்துக்குள் எடப்பாடியின் பிடி அதிகரித்துவிடும் என அஞ்சுகின்றனர் சசிகலா தரப்பினர். சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து விவாதித்த சசிகலா கணவர் நடராசன், ஒவ்வொரு நாளும் எடப்பாடியின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதுகூட உங்களுக்குத் தெரியவில்லை. அவசரப்பட்டு நாம் எடுத்த முடிவுகளால், இன்று நம்மையே அழிக்கும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார். ஸ்டாலினோடு மோதப் போவது நமது குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். இந்த வாய்ப்பு எந்த சூழலிலும் வேறு கைகளுக்குப் போய்விடக் கூடாது. அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தயக்கம் காட்ட வேண்டாம். அம்மா வழியிலான ஆட்சி இதுவல்ல என்பதை மக்கள் மத்தியில் பிரசாரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
மும்மூர்த்திகள்
நடராசன்-தினகரன்-திவாகரன் ஆகிய மூவரும் ஒன்றாகக் கூடி விவாதிப்பதை ஆட்சிக்கான ஆபத்தாகத்தான் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிலும், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கொடுத்தது நாங்கள்தான் என சமூக ஊடகங்கள் வழியாக அனுதாபத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது திவாகரன் தரப்பு. சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நிகராக எடப்பாடி படத்தைப் போட்டோம். அப்படியும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார். ஜெயலலிதா பாதுகாப்பு கொடுத்ததற்காக மண்டை உடைப்புக்கு நாங்கள் ஆளானபோது, எடப்பாடி எங்கு இருந்தார்?' எனக் கொதிக்கின்றனர் திவாகரன் தரப்பு.
எங்களால்தான் ஜெ.
ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடப்பாடி தரப்பு எடுத்துக் கொள்ளவில்லை. 1989ம் ஆண்டு எங்கள் சமூகத்தின் ஆதரவில்தான் எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ஜெயலலிதா. அடுத்து வந்த தேர்தல்களில் அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருந்தோம். டெல்டாவைத் தவிர, அவர்களுக்கு எங்கே செல்வாக்கு இருக்கிறது?' என எகிறுகிறது கொங்கு கோஷ்டி.
திணறும் சசிகலா குடும்பம்
இப்படியொரு பதவியை விட்டுத் தர எடப்பாடியும் தயாராக இல்லை. அமைச்சர்களும் தயாராக இல்லை. அதேநேரத்தில் கொங்கு கோஷ்டியை உடைக்கும் வழி தெரியாமல் திணறி வருகிறது சசிகலா தரப்பு.