சசிகலா குடும்பத்தினரின் ரூ.4500 கோடி சொத்துகளை கையகப்படுத்த ஐடி துறை திட்டம்
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ, 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சொத்துகள் குறித்து 3 மாதத்துக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.
திருமண கோஷ்டி போல் ஒரே இடத்தில் கார்களை வாடகைக்கு எடுத்த அதிகாரிகள் 8 நாட்களாக சோதனை நடத்தினர்.
சசிகலா அறையில் சோதனை
மேற்கண்ட ரெய்டுகள் முடிவடைந்த ஒரு வாரத்துக்கு பின்னர் திடீரென இரவு போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சொந்தமான ஒரு அறையிலும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்து லேப்டாப், பென்டிரைவ் ஆகியன கைப்பற்றப்பட்டது.
செயலற்ற நிறுவனங்கள்
ஷெல் நிறுவனங்கள் எனப்படும் செயலற்ற நிறுவனங்களின் மீது சசிகலா குடும்பத்தினர் ரூ. 4500 கோடி சொத்துகளை குவித்திருப்பதாக வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் பிப்.10-ஆம் தேதி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
நேரில் சென்று விசாரணை
எனினும் தான் ஜெயலலிதாவுக்காக பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மௌன விரதம் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறிவிட்டதால் வேறு ஒரு தேதியில் சிறைக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
3 மாதங்களுக்குள் விளக்கம்
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. அதுகுறித்து 3 மாதங்களுக்குள் சசிகலா மற்றும் குடும்பத்தினர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் சொத்துகள் நிரூபணமானால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வரை கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது.