ஜெ. இருந்த போதும் இறந்த பிறகும் கணவருடன் வாழ முடியாமல் போன சசிகலாவின் விதி!
ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும் அவர் இறந்த பிறகும் கூட சசிகலாவால் கடைசி வரை தனது கணவருடன் வாழ முடியாமலே போய்விட்டது.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும் அவர் இறந்த பிறகும் கூட சசிகலாவால் கடைசி வரை தனது கணவர் நடராஜனுடன் சராசரி பெண்கள் போல வாழ்க்கை நடத்த முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க பரோல் கிடைக்காததால் கடைசி நேரத்தில் கூட கணவர் அருகில் இருக்கும் வாய்ப்பு சசிகலாவிற்கு கிடைக்கவில்லை.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனுக்கும் 1970-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய நடராஜன், மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி தனது மனைவி சசிகலாவிற்கு ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்பை பெற்றார்.
எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா. அவ்வபோது வேதா நிலையத்திற்கு சென்று ஜெயலலிதாவிற்கு தேவையான வீடியோ கேசட்டுகளை கொடுத்து வந்ததன் மூலம் சசிகலா, ஜெயலலிதாவின் நட்பு வட்டம் விரிவடைந்தது.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்
ஜெயலலிதாவை நோட்டம் பார்க்க எம்ஜிஆர் செய்த ஏற்பாடு தான் சசிகலா வேதா நிலையத்திற்குள் அனுப்பப்பட்டார் என்ற கதைகளும் உண்டு. எனினும் தனக்கு கிடைத்த பெரிய இடத்து சவகாசத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டனர் சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும். ஜெயலலிதாவின் தாயார் மறைவுக்குப் பிறகு அவருக்கு பணிவிடை செய்து வந்த சசிகலா, தான் இன்றி ஜெயலலிதாவால் இயங்க முடியாது என்ற தோற்றத்தை உருவாக்கினார்.
ஜெ. உடனேயே தங்கிய சசிகலா
சசிகலா ஜெயலலிதாவின் நட்பு வட்டத்தில் பெரும் பிடிப்பு ஏற்பட்ட நிலையில் கணவர் நடராஜனுடன் வாழாமல் ஜெயலலிதாவுடனேயே வேதா நிலையத்தில் வசித்து வந்தார் சசிகலா. இரவு நேரத்தில் கணவரை பெசன்ட் நகர் வீட்டிற்கு சென்று சசிகலா பார்த்து வந்தார் என்று அவ்வபோது செய்திகள் வெளியாகும் இதைத் தவிர சசிகலா நடராஜனுடன் வெளிப்படையான வாழ்க்கையை நடத்தவில்லை.
பேட்டியின் போது சொன்ன நடராஜன்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலன் தேறிய பிறகு நடராஜன் அளித்த பேட்டியில் கூட தானும் தனது மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சசிகலாவின் தாயார் கிருஷ்ணவேணியம்மாள் மிகவும் ஆசைப்பட்டதாக கூறி இருந்தார். ஜெயலலிதாவிடம் சென்று சசிகலாவின் தாயாரும் தனது தாயாரும் இது குறித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடைசி வரை சேர்ந்து வாழ முடியவில்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்திலும் கணவருடன் சேர்ந்து வாழவில்லை சசிகலா. எனினும் கணவர் சொல்வது போல ஜெயலலிதாவை வைத்து அதிகார பலம், பணபலத்தை கூட்டி தங்களது மன்னார்குடி குடும்பத்தில் உள்ள அனைவரையும் வளர்த்துவிட்டனர். ஜெயலலிதா இறந்த பின்னரும் கூட கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு சசிகலாவிற்கு கிடைக்கவில்லை.
சசிகலாவின் விதி செய்த சதியா?
சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு சிறை சென்ற சசிகலாவை சிறை வாசல் வரை சென்று ஆறுதல் படுத்திவிட்டு வந்தார் நடராஜன். அதன் பிறகு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வந்து கணவரை பார்த்துவிட்டு சென்றது தான் கடைசி. கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சராசரி பெண் போன்ற வாழ்க்கையை வாழ முடியாமல் கடைசி நேரத்திலும் கணவனுடன் இருக்காமல் போனதற்கு சசிகலாவின் விதி காரணமா, அல்லது அதிகார பண ஆசை காரணமா?