2011- டிச. 19: சசிகலா உட்பட மன்னார்குடி கும்பலை கூண்டோடு அதிமுகவில் இருந்து ஜெ. விரட்டியடித்த நாள்!
சென்னை: வரலாற்றின் பக்கங்கள் எப்படியெல்லாம் திரும்புகிறது பாருங்கள்... இன்று அதிமுகவின் தலைமையையும் ஆட்சியையும் கபளீகரம் செய்ய சதித்திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார் சசிகலா... இதே சகுனித்தனமான சதிசெயலுக்காகவே 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து இதே சசிகலா உட்பட ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்தையுமே கூண்டோடு ஜெயலலிதா விரட்டியடித்த நாளும் இன்றுதான்! 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதியன்று சசிகலாவை எந்த போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா விரட்டியடித்தாரோ அதே போயஸ்தோட்டத்தை கைப்பற்றி இன்று சசிகலா சதிராடுவது கண்டு அதிமுகவினர் வேதனையில் உச்சத்தில் இருக்கின்றனர்.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. ஜெயலலிதா முதல்வரான சில மாதங்களிலேயே திடீரென அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
தனது உடன்பிறவா சகோதரி என அழைத்த சசிகலா உட்பட 12 பேரை அதிமுகவில் இருந்து 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதியன்று கூண்டோடு நீக்கினார் ஜெயலலிதா. சசிகலாவின் உறவினர்கள் ஒருவரைக் கூட அதிமுகவில் இருக்கவிடாமல் துரத்தியடித்தார் ஜெயலலிதா.

விரட்டப்பட்டவர்கள்..
போயஸ் கார்டன் பங்களாவில் இருந்தும் சசிகலாவை துரத்திவிட்டார் ஜெயலலிதா. அன்று ஜெயலலிதாவால் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டவர்கள்: சசிகலா, எம்.நடராஜன் (சசிகலா கணவர்), வி.என்.சுதாகரன் (சசிகலா அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசிகலா அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசிகலாவின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசிகலாவின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் உடன் பிறந்த சகோதரர்), ராஜராஜன் .

என் சொந்தங்கள் சதிகாரர்கள்
பின்னர் சில மாதங்கள் கழித்து சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஜெயலலிதாவுக்கும் ஆட்சிக்கும் எதிராக தம்முடைய குடும்பத்தினர் சதி செய்தது தமக்கு தெரியாது என்றும் என்னுடைய உறவினர்களுடன் எனக்கு ஒட்டோ உறவோ கிடையாது; அரசியலில் கவுன்சிலர் பதவியைக் கூட தாம் விரும்பவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார் சசிகலா.

அப்பல்லோவில் மன்னார்குடி கேங்
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவரால் விரட்டியடிக்கப்பட்ட, தூக்கி சிறையில் போடப்பட்ட அதிமுகவின் 'துரோகிகள்' எனப்படும் மன்னார்குடி குடும்பமே மீண்டும் கை கோர்த்தது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையை 75 நாட்களும் மன்னார்குடி குடும்பதான் கஸ்டடியில் வைத்திருந்தது.

கொல்லைப்புற முயற்சி
ஜெயலலிதா மறைந்த போது அவரது உடலைச் சுற்றி நின்றதும் அதே துரோகிகள்தான். அன்று அரசியல் ஆசையே கிடையாது என்று சொன்ன சசிகலாதான் இன்று அதிமுக பொதுச்செயலர் பதவிக்கும் உச்சகட்டமாக முதல்வர் பதவிக்கும் பேராசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்..

அதிமுக தொண்டர்கள் வேதனை
எம்ஜிஆர் எனும் மகத்தான மனிதர் உருவாக்கிய பேரியக்கத்தை பொதுவாழ்க்கையில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் கொல்லைப்புறமாக கபளீகரம் செய்ய முடிக்கிறார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மன்னார்குடி குடும்பம் குறுக்குவழியில் கைப்பற்ற முனைகிறது; விரட்டியடிக்கப்பட்ட போயஸ்தோட்டத்தில் ராஜதர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிமுக தொண்டர்களின் பெரும் வேதனையாகும்.












Click it and Unblock the Notifications