சசிபெருமாள் மரணம்: நீதி விசாரணை கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் போராட்டம்
சேலம்: காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி சொந்த ஊரான மேட்டுக்காட்டில் சந்திரன் என்ற இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரத்திலும் செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் டவர்மீது ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் நேற்று உயிரிழந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிதம்பரத்தில் இளைஞர் ஒருவர் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சிதம்பரம் காமாட்சியம்மன் தோட்டம் செல்லியம்மன் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 23). சமூக ஆர்வலர். பி.பி.ஏ. பட்டதாரி. சிதம்பரத்தில் உள்ள காந்திஜி நல இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். சமூக நல இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். மது ஒழிப்பு போராட்டங்களிலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி காந்தியவாதி சசிபெருமாள் நேற்று இறந்த சம்பவத்தை கேட்டு இவர் மிகவும் மனம் வருந்திய சந்தோஷ் குமார் இன்று காலையில் வண்டிகேட் பகுதியில் பி.எஸ்.என்.எல்.லுக்கு சொந்தமான செல்போன் கோபுரத்தில் சந்தோஷ் ஏறினார். 200 அடி உயரம் ஏறிய அவர் அங்கு நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டார். சசி பெருமாள் சாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சுந்தரவடிவேல், தாசில்தார் முரளிதரன், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். செல்போன் கோபுரத்தில் ஏறிய சந்தோஷ் குமாரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினார்கள். ஆனால், அவர் இறங்க மறுத்துவிட்டார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அரசு உறுதி அளித்தால்தான் எனது போராட்டத்தை கைவிடுவேன். இல்லா விட்டால் செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி எனது போராட்டத்தை தொடருவேன் என்றார். மதுவிலக்கை அமல்படுத்தி இருந்தால் சசி பெருமாள் இறந்திருக்க மாட்டார் என்று அரசு மீது குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக அரசுக்கு தகவல் அனுப்புவதாக தாசில்தார் உறுதி அளித்தார். மேலும் சந்தோஷ்குமாரின் தாய் செல்வி அவரை கீழே இறங்கி வரும்படி வலியுறுத்தினார். இதையடுத்து 9.45 மணிக்கு சந்தோஷ்குமார் செல்போன் கோபுரத்தை விட்டு கீழே இறங்கினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். சந்தோஷ்குமாரின் 4 மணி நேர போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழே இறங்கிய அவர், செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை அனைவரும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
சேலத்தில் போராட்டம்
இந்த நிலையில் சசிபெருமாளின் சொந்த ஊரான மேட்டுக்காட்டில் இன்று ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்திரன் என்ற இளைஞர், அருகில் இருந்த செல்போன் டவரில் கிடுகிடு என்று ஏறினார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால் சந்திரனோ, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கூறினார். இதனையடுத்து ஏராளமானோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரனை கீழே இறங்கச் செய்தனர்.