நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... நடராஜன் ரிட்டனால் உற்சாகத்தில் சசிகலா குடும்பம்
நடராஜன் மருத்துவமனையில் இருந்து நலமுடன் திரும்பி வந்துள்ளதால் சசிகலா குடும்பம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
Recommended Video
சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் நடராஜன் வீடு திரும்பியுள்ளது சசிகலா குடும்பத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார் சசிகலா கணவர் நடராஜன். உறுப்பு தானம் கோரி, தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
இந்தநிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் விபத்துப் பிரிவில் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கார்த்திக் என்ற நபர் மூளைச் சாவு அடைந்ததாகக் கூறி, சென்னை கொண்டு வந்தனர். அந்த இளைஞரின் கல்லீரலும் சிறுநீரகமும் நடராஜனுக்குப் பொருத்தப்பட்டது.
வீடு திரும்பிய நடராஜன்
இதனையடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தார் நடராஜன். உடல்நலம் தேறிய நிலையில்மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். நெருங்கிய உறவினர்களைத் தவிர, வேறு யாரும் அவரைச் சந்திக்க முடியாதபடி ரகசிய இடத்தில் வைத்து அவரைக் கவனித்து வருகின்றனர்.
ஜெ.வுக்கு ஆலோசகர்
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைமறைவு அரசியலில் கோலோச்சி வந்தார் நடராஜன். ஜெயலலிதாவுக்கு ஆரம்பகாலங்களில் அரசியல்ரீதியான ஆலோசனைகளை அவர்தான் அளித்தார். அதிகாரத்துக்குள் வராமல் அவர் எடுத்த பல முடிவுகள் அ.தி.மு.கவுக்கு நன்மையையே தேடித் தந்தது.
நடராஜனை உதாசீனம் செய்த உறவுகள்
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, குடும்ப உறவுகளுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியிருந்தார். உங்கள் காலகட்டம் வேறு. இப்போதுள்ள காலகட்டம் வேறு எனக் குடும்பத்து ஆட்கள் அவரை உதாசீனப்படுத்திவிட்டனர்.
நடராஜனின் வியூகம்
அதனால்தான் குடும்பத்து விழாக்களிலும் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்தார். குறிப்பாக, மோடியை எதிர்த்து நாம் அரசியல் செய்தால்தான் கட்சி வளரும். மாறாக, அவர்களிடம் சரண்டர் ஆகிவிட்டால் நம்மை முற்றாக அழிக்க நினைப்பார்கள். மோடி எதிர்ப்பைத் தீவிரமாகக் கடைபிடித்தால் காங்கிரஸ், வி.சி.க, இஸ்லாமிய அமைப்புகள் உள்பட ஜனநாயக சக்திகள் எல்லாம் நம்மைத் தேடி வருவார்கள். நாமும் ஒரு தலைமையாக உருவெடுக்க முடியும். நம்மைத் தேடி தேசிய தலைவர்கள் வருவார்கள். வரும் காலங்களில் மோடி எதிர்ப்புதான் ஓட்டுக்களை அள்ளித் தரும். வழக்குகளில் நம்மை சிக்க வைத்துவிடுவார்கள் என பயப்பட்டால், நிலைமை மேலும் சிக்கலாகிவிடும் என எச்சரித்தார்.
நடராஜன் புறக்கணிப்பு
இதனை குடும்பத்தினர் யாரும் கேட்கவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை இறக்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. இதனை நடராஜன் ஏற்றுக் கொள்ளவில்லை. தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. எனவே, முதலமைச்சரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார். அவரது வார்த்தைகளை சசிகலா புறம்தள்ளிவிட்டார். இதற்கு முழுக் காரணமும் தினகரன்தான். ஓபிஎஸ் மீது கை வைத்தால், மத்திய அரசு எந்த வழியில் நம்மை அழிக்க முற்படும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதற்கேற்ப, அவர் வகுத்த வியூகங்களையும் தினகரன் ஒதுக்கித் தள்ளிவிட்டார். அப்போலோவுக்கு ராகுல்காந்தி வந்ததன் பின்னணியில் நடராஜன்தான் இருந்தார். இந்த அரசியலை சரியான வழியில் கொண்டு செல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் கெடுத்துவிட்டனர்.
இனி நடராஜன் வியூகம்
அந்தக் கோபம் நடராஜனுக்கு உண்டு. இதை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்ட சசிகலா, நமது குடும்பத்துக்கு அவர் மூத்தவர். இனி அவர் சொல்வதைக் கேட்டுச் செயல்பட வேண்டும்' என உறவுகளிடம் பேசியிருக்கிறார். இனி அடுத்துச் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி, நடராஜன் விவாதித்து வருகிறாராம்.