சாத்தூர் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: துப்பாக்கி கொடுத்தவர் சென்னையில் கைது !
சென்னை: சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிக் கொடுத்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி சாத்தூர் அருகே கடந்த 12ம் தேதியன்று புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முகமது ரஃபிக் என்பவர் மதுரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மகாலட்சுமி என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். மகாலட்சுமி அந்த துப்பாக்கியை ஓ.மேட்டுப்பட்டி கண்மாய் பாலத்திற்கு அடியில் மறைத்து வைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை துப்பாக்கியை மீட்ட போலீசார், கொலைக்கு உதவியதாக ரபீக் மனைவி பானு, பானுவின் தோழிகளான லதா, லட்சுமி, உள்ளிட்ட வாசுமுத்து மற்றும் பாக்கியராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கருப்பசாமி கொலைக்காக துப்பாக்கி வாங்கிக் கொடுத்தவரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்த ராபர்ட் கென்னடி என்பவரை சாத்தூர் போலீஸார் கைது செய்தனர். அவரை சாத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைதான ராபர்ட் கென்னடி மணிப்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.