இலங்கையின் கொலைவெறியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.. மீனவர்கள் கதறல்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை உள்ளேயே வந்து அடிக்கிறது. தொடர்ந்து உயிர்ப்பலி வாங்குகிறார்கள். எங்களை இந்த கொலை வெறிப் படையிடமிருந்து மத்திய அரசும், மாநில அரசும் காப்பாற்ற வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை சிங்கள வெறிப்படை மீண்டும் ரத்தம் குடிக்க ஆரம்பித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து ஒரு மீனவரின் உயிரைப் பறித்துள்ளனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். இன்னொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தப் படுகொலை மீனவர்களிடையே கடும் அதிருப்தியையும், வேதனையையும், குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறுகையில், எங்களது படகுகளை சிறைப்பிடித்தார்கள். மீனவர்களை சிறைப்பிடித்தார்கள். இந்த அரசாங்கம் அவர்களை மீட்டுக்கொடுக்கவில்லை.
இப்போது எங்களை கடலிலேயே சுட்டுக்கொலை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். சூடுபட்டு வந்திருக்கிறோம். ஒரு மீனவனைக் கொன்று விட்டனர். இனிமேலாவது எங்களது உயிரைக் காப்பாற்றுங்கள். எங்களது படகுகளைக் கூட நீங்கள் மீட்க வேண்டாம் இனிமேலாவது இந்த கொலை வெறி தாக்குதலில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.
எங்க படகுகளைத்தான் உங்களால் மீட்டுத் தர முடியவில்லை. உயிரையாவது காப்பாற்றிக் கொடுங்கள். மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கையை நட்பு நாடு, நட்பு நாடு என்று கூறுகிறது மத்திய அரசு. ஆனால் எங்களை சுட்டு கொலை செய்கிறது இலங்கை அரசு.
ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம். மறுபடியும் கொலை செய்ய ஆரம்பித்துள்ளது இலங்கை. எங்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.