ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு - மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் உடனே தீர்ப்பு அளிக்கமுடியாது என்று கூறிவிட்டது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இரவு பகலாக போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டம் தீவிரமடையவே, பிரதமர் மோடியிடம் டெல்லி சென்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாக கூறிய மோடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.
இதனையடுத்து முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் உடனே போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி ஜல்லிக்கட்டு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. எனவே இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் முகுல் ரோத்தகிகேட்டுக்கொண்டார்.
இதனையேற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனவே தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பில்லை. எனவே அவசர சட்டம் பிறப்பித்த உடன் உடனே அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தற்காலிக தீர்வுதான். எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நாங்கள் போராட்ட களத்தில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.