மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் கல்யாணி பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை!
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததில் விதிமீறல் உள்ளதாக மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஜெயராஜ், இஸ்மாயில் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தங்களின் மனுவில், ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து 9.4.2012 அன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக பதவியேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவி வகிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக மட்டுமே பணியாற்றி உள்ளார். பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது சரியல்ல. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணியை பதவி நீக்கம் செய்ய ஜூன் 26ம் தேதி ஆணையிட்டனர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கல்யாணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இதுகுறித்து, தமிழக ஆளுநர், யு.ஜி.சி., காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனுதாரர்கள் 2 பேர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.