லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 29ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல்
16வது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டன. வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 14ம் தேதி வரை 9 கட்டங்களாக இத்தேர்தல் நடத்தப் பட உள்ளது. மே 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதில் தமிழகத்தில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டநிலையில், திமுக உட்பட மற்றபிறக் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தமிழக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மனுக்கள் மீது பரிசீலனை செய்ய ஏப்ரல் 7ம் தேதி கடைசி என்றும், மனுக்களை வாபஸ் பெற கடைசித் தேதி ஏப்ரல் 9 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.