சட்டசபை தேர்தல்: திமுக, அதிமுவினர் மீது வழக்கு - ஜெ. படம் போட்ட ஸ்கூல் பேக் பண்டல்கள் பறிமுதல்
சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அனுமதியின்றி பிளக்ஸ் வைத்ததாக அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை கட்சியினர் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போடி அருகே நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் மினி லோடு ஆட்டோக்களில் கொண்டு செல்லப்பட்ட முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட ஸ்கூல்பேக் மற்றும் செருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் மே16ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
பெருநகர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற தொடங்கி உள்ளது. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள் அருகில் உள்ள தலைவர்கள் சிலைகளை மறைக்கும் பணியும் நடைபெற தொடங்கியது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் பெயர் பலகையில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்தை மறைக்கும் பணியிலும், அரசியல் கட்சியினர் சாலையில் ஆங்காங்கே வைத்துள்ள பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக ஈடுபட தொடங்கினர்.
அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் இந்த பணிகள் அனைத்தும் முழுமையடையும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஒரு தொகுதிக்கு ஒரு சோதனை மையம் என்ற அடிப்படையில் 16 தொகுதிகளுக்கு சோதனை மையங்கள் அமையும் இடங்களின் பட்டியல் தயாரிக்கும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலூரில் அனுமதியின்றி பிளெக்ஸ் பேனர் வைத்த அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனடியாக பிளெக்ஸ் பேனர்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையில் நேற்றிரவு கம்பம் திமுக எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது. அப்போது, அவ்வழியாக இரு மினி லோடு ஆட்டோக்களில் தமிழக அரசு முத்திரையுடன், முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய ஸ்கூல்பேக் மற்றும் செருப்பு ஆகியவை பண்டல், பண்டலாக ஏற்றி வருவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திமுக,மாநில பொதுக்குழு உறுப்பினர் அனீபா, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் குமார் ஆகியோர் தலைமையில் பண்ணைப்புரம் அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிராமத்தில் மினி ஆட்டோக்களை சிறைப்பிடித்தனர். அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களிடம், ‘இவை யாருடையது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது' என கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் தரவில்லை.
இதுகுறித்து, தேவாரம் போலீசாருக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியான உத்தமபாளையம் ஆர்டிஓ ராசய்யாவுக்கும் தி.மு.க.வினர் தகவல் அளித்தனர். பின்னர் 2 மினிலோடு ஆட்டோக்களையும் தேவாரம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, தேர்தல் தேதி அறிவித்தும், ஜெயலலிதா படம் போட்ட ஸ்கூல்பேக் கொண்டு வந்தது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனக்கூறி போலீசாரை முற்றுகையிட்டனர். மல்லிங்காபுரம் கிராமம் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.