பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு.. கல்வியாளர்கள் வருத்தம்
சென்னை: பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பள்ளி கல்வி துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளாராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உதயச்சந்திரன் பள்ளிக்கல்வி துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு பள்ளிக் கல்விதுறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். பாடத் திட்ட மாற்றம், 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என பல திட்டங்களின் சூத்திரதாரி இவர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இதனால் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், கட்சியினர் கூறியபடி பணியிடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் செயல்பட மறுத்ததால் முதல்வருக்கு நெருக்கடி கொடுத்தனர் சில ர.ரக்கள்.
இந்த நிலையில் உதயச்சந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை, மாற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
ஆனால், தற்போது அவரைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து ஒருபடி கீழிறக்கி பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழு செயலாளராக மாற்றியுள்ளது அரசு. பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு.