சென்னை கட்டட விபத்து: அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.டி.பி.ஐ
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தில் 11 பேர் பலியான விவகாரத்தில், தவறு நடந்திருக்கும்பட்சத்தில் அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர். 25 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, வருந்தத்தக்கது. இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த விபத்தை அடுத்து, அங்கு துரித மீட்பு பணிகளை மேற்க்கொள்ள நடவடிக்கை மேற்க்கொண்ட தமிழக அரசை பாராட்டுகிறேன்.
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் இருந்த இடம் ஏரிப்பகுதி என்று தகவல் தெரிவிக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாக அமைக்கப்படாததே கட்டிடம் சரிய காரணம் என கூறப்படுகிறது. இதற்கு அந்த கட்டுமான நிறுவனமும், அந்த கட்டிட கட்டுமானப் பணிகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல், தொடர்ந்து கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளே முக்கிய காரணம்.
அவ்வப்போது இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் செயல்படும் அதிகாரிகள், சில விதிமுறைகளை அறிவித்துவிட்டு பின்னர் அதை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். அதுகுறித்த எந்த ஆய்வையும் அவர்கள் மேற்க்கொள்வதில்லை.
மேலும் இந்த விபத்தில் உயிர் இழப்புகள் அதிகரிக்க காரணம் அங்கு பணி செய்த தொழிலாளர்களுக்கு உரிய தங்குமிடம் அளிக்காமல், அந்த கட்டிடத்திற்குள் தங்கவைத்ததே ஆகும். ஆகவே இதுபோன்று தொழிலாளர்களுக்குத் தேவையான வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அடுக்குமாடி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கும் அதிகாரிகள், அந்த கட்டுமான நிறுவனத்தின் முன் அனுபவம் குறித்து ஆய்வு எதனை மேற்க்கொள்ளாமல் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கின்றனர். ஆனால், அந்த கட்டிடம் கட்டப்படும்போது அதன் உறுதித் தன்மை குறித்தும், அந்நிறுவனம் கடைப்பிடிக்கும் கட்டிட நெறிமுறைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்க்கொள்வதில்லை.
ஆகவே புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது, அந்த கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கும் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடாத வகையிலும், அதன் உறுதித்தன்மைக்கு அதிகாரிகளையும் உட்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி கண்காணிப்பு நடைமுறை மேற்க்கொண்டால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்விபத்திற்கு காரணமான கட்டுமான நிறுவனத்தினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், தவறு நடந்த பட்சத்தில் அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி மேற்க்கொண்டு விபத்துக்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.