குற்றாலத்தில் களைகட்டிய சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ளது. நெல்லை,குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் சாரல் மழையோடு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர்.
மிதமான சாரலும் இதமான காற்றும் வீசுவதால் உற்சாகமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் குற்றால அருவிநீரில் குளித்து மகிழ்கின்றனர்.

தாமதமான குற்றால சீசன்
குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுத்தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் சீசனும் துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் முழுமையாக களைகட்டாமல் இருந்த நிலையில் . அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

களைகட்டிய சீசன்
இந்நிலையில் கடந்த இருநாட்களாக சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. சாரல் மழையோடு இதமான காற்றும் வீசுகிறது.
மேலும் மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பரவலாக தண்ணீர் விழுகிறது.

கொட்டும் அருவி நீர்
மெயின்அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் கொட்டுகிறது. வெயிலும்,சாரலும், மாறி மாறி வந்து அருமையான குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை
சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆர்பரித்து விழும் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

வியபாரிகள் மகிழ்ச்சி
குளுமையான சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குத்தாட்டம் போடும் குடிமகன்கள்
குற்றாலத்தில் வழக்கம் போல குடிமகன்கள் தொல்லையும்அதிகரித்தே காணப்படுகிறது.அருவிக்கரை முதல் பேருந்து நிலையம் மட்டுமின்றி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உற்சாகபானங்களை பருகி குத்தாட்டம் போடுவதும்,குப்புற கிடப்பதும் அதிகரித்துள்ளது.

விடுமுறை நாட்களில்
சனி, ஞாயிறு வாரவிடுமுறைத்தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமரியில் கனமழை
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி, கன்னிமார், திருவட்டார், புத்தன்அணை, இரணியல், ஆனைகிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை விடிய விடிய பெய்துவருகிறது.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அருவியில் கொட்டும் நீரில் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications