அதிமுகவின் இரு கோஷ்டிகளும் அடித்துக் கொள்ள வாய்ப்பு.. தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!
இரு தரப்பும் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதும் காவல்துறை, இன்று காலை முதலேயே சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகலா குடும்பத்தின தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இதில் எம்எல்ஏக்கள் ஜக்கையன், தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு, வெற்றிவேல், செல்வ மோகன்தாஸ், சாத்தூர் சுப்ரமணியன், ஏழுமலை, சின்னத்தம்பி மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று ஆலோசனை
ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்ப்பு
இதனிடையே தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் இல்லை என அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே தினகரன் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்க கூடாது என எம்.எல்.ஏக்களுக்கு உட்கட்சியிலேயே, எதிர்ப்பு வலுத்து வருகிறது.
தடுக்க வாய்ப்பு
எதிர்ப்புக்கு நடுவேயும், ஒரு சில எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அப்படி பங்கேற்பவர்களை தடுக்க ஓ.பி.எஸ், எப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு நிர்வாகிகள் தடுக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் குவிப்பு
இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இரு தரப்பும் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதும் காவல்துறை, இன்று காலை முதலேயே சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.