முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் 'அன்-ரிசர்வ்ட்' பயணிகள் ஏறக் கூடாது என எச்சரிக்கை!
சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்துள்ள பயணிகள் பயணம் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சதிகாரர்கள் பயணிகள் போல ரயில் பெட்டிக்குள் நுழைந்து குண்டுகளை வைத்துள்ளனர். 2 இடத்தில் வைத்த குண்டுகள் வெடித்து ஒரு பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தையொட்டி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள், அவர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.
அனைத்து ரயில்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மேலும் ரயில் பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சந்தேகப்படும்படியான நபர் யாராவது சுற்றித் திரிந்தாலோ பொருட்களை வைத்து இருந்தாலோ உடனே டிக்கெட் பரிசோதகர்களிடமோ அல்லது பாதுகாப்பு போலீசாரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒரு பெட்டியில் பொருட்களை வைத்துக் கொண்டு இன்னொரு பெட்டியில் பயணம் செய்வது இருக்கைக்கு அடியில் வைக்கப்படும் பெட்டிகள், பொருட்கள், பைகள் பற்றி ஒவ்வொரு பயணிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.
ஒவ்வொரு பெட்டிகளிலும் போலீசார் ஏறிச் சென்று அனாதையாக கிடக்கும் பை, பெட்டிகள் குறித்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இதுதவிர முன்பதிவு செய்த பெட்டியில் முன்பதிவு செய்யலாமல் சாதாரண டிக்கெட் எடுத்துள்ளவர்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது என டிக்கெட் பரிசோதகர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு பெட்டிகளில் படுக்கை உறுதி செய்யப்பட்டவர்கள். ஆர்.ஏ.சி. பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ரயில்வே ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் போன்றவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறை மீறி செல்பவர்கள் மீது கடும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பரிசோதகர்களுக்கு தற்போது கட்டளையிடப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கைக்காக எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போலீஸ் மற்றும் ரெயில்வே தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.