வாலிபால், பேஸ்கட் பால்.. ஏன் புட்பால் கூட தெரியும்.. அதென்ன "சீட் பால்"?
தமிழகத்தில் மழை வளத்தை அதிகரிக்க காடுகள் தோறும் "விதை பந்துகள்" வீசும் திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
சென்னை: மரம் நடுவதன் மூலம் மழை வளத்தை அதிகரிக்க முடியும் என்ற வகையில் விதை பந்துகளை வீசும் உன்னதமான பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே மரங்கள் வெட்டப்பட்டதால் மழை கிடைக்காமல் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு பராமரிப்பது என்பது சாத்தியப்படாது. எனவே சாணம், மணல், விதை ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருண்டைகளாக பிடித்து அதை காயவைத்து காட்டு பகுதிகளில் வீச வேண்டும்.
இளைஞர்கள் கையில்...
இதனால் விதையில் இருந்து முளை வந்து எந்த வித பராமரிப்பின்றி செடி வளரத் தொடங்கிவிடும் என்பதால் விதை பந்துகளை வீசும் திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 5000 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டுள்ளன.
விதை பந்துகள்
இதுகுறித்து தமிழக இளைஞர் அமைப்பு கூறுகையில், 5 பங்கு மணலுக்கு 3 பங்கு சாணம் கலந்து அதன் இடையே விதை வைத்து உருட்டி காயவைக்க வேண்டும். பின்னர் தமிழகத்தில் காடுகளை அதிகரிக்கும் நோக்கமாக தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் விதைபந்துகளை இளைஞர்கள் அமைப்பினர் தூவி வருகின்றனர்.
1 கோடி இலக்கு
அதன்படி புங்கை, வேப்பை, புளிய மரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளை பந்து போல் உருட்டி வீசி வருகிறோம். இதுபோல் இந்த ஆண்டுக்குள் 1 கோடி விதை பந்துகளை வீச இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றனர்.
சீமை கருவேல மரங்கள்
மதுரையில் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், 50 ஆயிரம் விதைப்பந்துகள் தூவி மரம் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.