சேலம் அருகே.. 8 வழி சாலை பற்றி மக்களிடம் கருத்து கேட்ட சீமான் திடீர் கைது!
Recommended Video

சேலம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் அருகே கைது செய்யப்பட்டார்.
சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசியிருந்தார் சீமான். இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எனவே, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் காலை 10 மணிக்கு ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அப்போது திடீரென மல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது. இதேபோன்ற காரணத்திற்காகவே சீமானையும் கைது செய்துள்ளனர் போலீசார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் 8 வழி சாலை திட்டம் மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12-05-2018 அன்று சேலம் காமலாபுரத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் நிகழ்வை ஒருங்கிணைத்தற்காக சூழியல் செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீதும் ஓமலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சீமான், முன் பிணை கோரி மனு பதிவு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சீமானுக்கு நிபந்தனை பிணை வழங்கியது.
இன்று 18-07-2018 காலை 11 மணியளவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டி கிராமத்தில் சேலம் 8 வழி விரைவு சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் கைது செய்யப்பட்டார்.
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) July 18, 2018
#Seeman #Salem pic.twitter.com/BMbwb1Sceu
இதன்படி, சேலத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், இன்று 18-07-2018 காலை 11 மணியளவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாயிகளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது அங்குவந்த காவல்துறையினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து மல்லூர் பேரூராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சீமான் கைது செய்யப்பட்டதிற்கு சேலம் பாரப்பட்டி கிராமப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் எங்களுக்கு ஆறுதல் கூறக்கூட யாரையும் அனுமதிக்காமல் எல்லோரையும் கைது செய்து எங்களைத் தனிமைப்படுத்துகிறீர்களே? என்று அப்பகுதி பெண்கள் காவல்துறையினரிடம் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications