திராவிட கட்சிகளை வீழ்த்த சபதம்... கரைசேருமா தனித்து போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி?
சென்னை: திராவிட கட்சிகளை மட்டுமல்ல... திராவிட அரசியலையே வீழ்த்த சபதமெடுத்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. திமுக, அதிமுக என திராவிட கட்சிகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கே வாக்களிப்பார்கள்; ஆகையால் நாங்களே ஆட்சி அமைப்போம் என தன்னம்பிக்கையோடு களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி.
திராவிடர் இயக்க, கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் 'பெரியாரின் பேரன்; மார்க்ஸின் மாணவன்; பிரபாகரனின் தம்பி' நான் என பேசி பெரும் ஆராவாரங்களைப் பெற்றவர் திரைப்பட இயக்குநர் சீமான். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்த காலத்தில் குறிப்பாக முத்துக்குமாரின் தீக்குளிப்புக்குப் பின்னர் சீமானின் அரசியல் பயணம் தனித்ததாக பயணப்பட்டது.
முதலில் 'நாம் தமிழர்' இயக்கமாக பின்னர் 'நாம் தமிழர் கட்சியாக' அரசியல் களத்துக்கு வந்தது.. 2009 லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸுக்கு எதிராக சீமானின் பிரசாரங்கள் அனலைக் கிளப்பின... 2011 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசார களத்தில் கர்ஜித்தார்...
இதனைத் தொடர்ந்து சீமானின் அரசியல் அடிகள் புதிய தடத்தில் தடம்பதித்தன. "இது தமிழர் மண்... பிற இனத்தவருக்கு வாழும் உரிமை உண்டு; ஆனால் ஆளும் உரிமை எமக்கே உண்டு" என புதிய முழக்கத்தை முன்வைத்தார். இன்றைய அரசியல் கட்சிகள் எதனையும் அவர் விட்டுவைக்கவில்லை.. குறிப்பாக திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டுகால ஆட்சிகள் தமிழருக்கு விரோதமானவை என்கிறார்... தற்போது நடைபெறும் தேர்தலே 'திராவிடர்களுக்கும் தமிழருக்குமான போர்' என்று பிரகடனம் செய்திருக்கிறார் சீமான்.
மற்றவர்கள் "மாற்று கட்சி அரசியல்" என்பதை முன்வைக்கிறார்கள்.... நான் அடிப்படையையே மாற்றுகிற "மாற்று தத்துவார்த்த அரசியலை" முன்வைக்கிறேன் என்கிறார் சீமான். அவரைப் பொறுத்தவரையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுகிறவர்கள் இம்மண்ணில் வாழலாம்; ஆளும் உரிமை கூடாது; இதுவரை ஆண்டவர்கள், இப்போது ஆள்கிறவர் எவருமே தமிழரே இல்லை என்பது திட்டவட்டமான நிலைப்பாடு; இதனை அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் தமிழர்களும் உணர்ந்து தங்களுக்கே வாக்காளிப்பார்கள் என ஒவ்வொரு கூட்டத்திலும் நம்பிக்கையோடு பேசி வருகிறார்.
அத்துடன் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் 'தமிழர் அரசு' என்ன மாதிரியான செயல்திட்டங்களை முன்னெடுக்கும்; எப்படியான நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதையும் விவரித்து வருகிறார் சீமான்.
நாம் தமிழர் கட்சிக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேலிகளுக்கு மத்தியில் அத்தனை வேட்பாளர்களையும் கடலூரில் ஒரே மேடையில் ஏற்றிக் காட்டினார் சீமான். அவரும் கடலூரில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களை மும்முரமாக பயன்படுத்துகிற சீமானின் ஆதரவாளர்கள் மக்கள் களத்தில் எப்படி களமாற்றப் போகிறார்கள்? மக்கள் அவர்களை எப்படி அங்கீகரித்திருக்கிறார்கள்? என்பதற்கான விடை மே 19-ல் தெரிந்துவிடும்.