நீட்டை நீக்கச் சொன்னால் எம்எல்ஏக்களை நீக்கி காமெடி செய்கிறார்கள்... சீமான்
நீட் தேர்வை நீக்கக் கோரி மக்கள் போராடினால் எம்எல்ஏக்களை நீக்கி நகைச்சுவை செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக ஆட்சியை விட 23ம் புலிகேசி ஆட்சியே பரவாயில்லை என்ற நிலையில் தான் தமிழக ஆட்சி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 72ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : சாதிக்கொடுமைய ஒழிக்கப் போராடிய புரட்சியாளர், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். தான் பெற்ற கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்
சமத்துவத்திற்காக பாடுபட்டவர்
சாதி மத பிளவுகளை ஒழித்து சமத்துவமான சமூக அமைக்க பாடுபாட்டாரோ, அவர் வழியில் நாங்களும் தொடர்ந்து உறுதியாக நின்று போராடும் நாளாக இன்றைய நாளில் உறுதியேற்றிருக்கிறோம். வரலாற்றை மறந்த சமுதாயம் வளர முடியாது. இதனாலேயே பெருமை மிகு அடையாளமாக தாத்தா இரட்டை மலை சீனிவாசனின் நினைவு நாளைக் கொண்டாடுகிறோம்.
நவோதயா பள்ளி ஏன்?
நவோதயா பள்ளி அதிகம் உள்ள மாநிலம் உத்திரபிரதேசம் ஆனால் கல்வியில் அவர்கள் முதல் நிலையில் இல்லை. இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சிகளே நவோதயா பள்ளிகள். நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழகமும், கேரளாவும் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. இதே கல்வி முறையில் படித்துத் தானே அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் சிறந்த விஞ்ஞானிகளும் உருவானார்கள்.
கட்சி, பதவி தான் முக்கியம்
தமிழக அரசு சரிவர இயங்கவில்லை, அவர்களுக்கு கட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே தான் கவனம் இருக்கிறது. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை கவனிப்பார்கள். பதவியை கவனிப்பது தான் பிரதானம் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டனர். எங்களது பிரதான நோக்கம் இவர்களிடம் இருந்து மக்களையும், நாட்டையும் காப்பாற்றுவது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.
இது தான் தூய்மை இந்தியாவா?
இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகம் மாறி வருகிறது; தமிழகத்தின் குப்பைத்தொட்டியாக கடலூர் மாற்றப்பட்டுவிட்டது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் பொள்ளாச்சி பகுதிகளில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. தூய்மை இந்தியா என்பது ஊழல் இல்லாமல், சாதி, மத பேதமின்றி இருக்க வேண்டும். மண் தூய்மையாவதை விட் மக்களின் மனம் தூய்மையாக வேண்டும்.
காமெடி செய்கின்றனர்
தமிழக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்கிறேன் என்கிற பெயரில் நகைச்சுவை செய்கின்றனர். மக்கள் நீட் தேர்வை நீக்க போராடினால் இவர்கள் எம்.எல்.ஏக்களை நீக்குகிறார்கள். 23ம் புலிகேசியின் ஆட்சியே மேல் என்பது போல் இருக்கிறது என்று சீமான் பேசினார்.