மணல் குவாரியை எதிர்த்து போராடும் களத்தூர் கிராம பெண்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த சீமான்
வேலூர்: பாலாற்றில் மணல் குவாரி அமைக்க, எதிர்ப்பு தெரிவித்ததால் கைதான மக்களை விடுவிக்கக் கோரி, போராடி வரும் பெண்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்துள்ளது களத்தூர் கிராமம். இப்பகுதி மக்கள் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்தி வந்தனர். எனவே, இது தொடர்பாக களத்தூர் காலனி பகுதி பொதுமக்கள் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி களத்தூரைச் சேர்ந்த 18 பெண்கள் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, 11ம் தேதி நள்ளிரவில் களத்தூர் மக்கள் ஒன்று திரண்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் 20 பேரைக் கைது செய்தனர். மேலும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
இதனால், கிராமத்தில் உள்ள ஆண்கள் தலைமறைவானார்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி வலியுறுத்தி, கிராம பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் இருந்த கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு, தங்கி அப்பெண்கள் போராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், களத்தூரில் தங்கி தானே போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.